திரும்பிப் போ

                                                                                                                            லிங் சின்னா 





மேக்னா ஷர்மா.தேவதை அவள்.டேலியா,பனித்துளி, பூஸ்குட்டி, கிளிக்குஞ்சு,சிட்டுக்குருவி,துளசிச்செடி,போட்டோகிரபி என்றுஒரு சொர்த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தாள்.அதிகாலை தியானம் அவளை மேலும் அழகாக்கி இருந்தது.அவளை பொறுத்தவரை தேநீரை தயாரிப்பதை விட அதை பருகுவது என்பது ஒரு அழகான கலை.வலப்பக்கமாக கைபிடியினை திருப்பி அதற்குள் இருவிரல்களைச்செலுத்தி,மெல்ல வாசனை முகர்ந்து ஊதி ஊதி ஆவியினை விலர்த்தி,ஓரம் முழுவதும் பரவியிருக்கும் குமிழ்களை குலோசப்பில் ரசித்து ரசித்து அலையெழுப்பாமல்,உறங்கும்குழந்தைக்கு உதட்டில் முத்தமிடுவதை போல தன் ரோஸ் உதடுகளால் உறிஞ்சும் அழகே ஒரு டீ விளம்பரபடம் போல இருக்கும். அருண் மொழியின் புல்லாங்குழலிசைபோல அத்தினை மெலிதாக பேசுபவளுக்கு, அக்நியை கண்டதுமே பொசு பொசுவென வந்தது..

"அடேய் கடங்கார நாயே உண்ணாலதாண்டா எனக்கிந்த நிலமை "என்று C செக்ஷ்ன் அதிர கத்தினாள்.

                                 

"ஓ அப்போ மட்டும் நல்லா இருந்துச்சா ?" என்ற நர்சின் உடனடி நக்களுக்கு அழுகையினூடே குப்புக்கென்று சிரித்துவிட்டு " கோபாலு இங்க கொஞ்சம் வாயேன்" என்று மெலிதாக கூப்பிட்டாள்.மேக்னா காதலில் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். அக்நியின் நிஜப்பெயர் கூட கோபால் தான். கோபால் எழுதிய நாவல் கோபால் எழுதிய சிறுகதை என்றால் யாரும் வாசிப்பதில்லை என்பதினால் அக்நி என்ற பெயரில் எழுத்திக்கொண்டிருக்கின்றான். கொஞ்சம் அவசரகாரன்.திருமணம் முடித்து ஆறே மாதத்தில் மேக்னாவை ஒன்பது மாதம் பன்னிரண்டு நாட்களாக்கியிருந்தான்.

"வலிதாங்காமல் திட்டிட்டேன் sorry baby ,இன்னொரு கல்யாணம் செஞ்சிக்குவியாடா?" என்று கண்கலங்கினாள்.

"அடிப்பைத்தியகாரி நீ என் உசுருடி ,நீ இல்லாம நான் மட்டும் இருப்பேன்னு நெனைச்சியாடி" என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அக்நியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

                                 

போலிக் அசிட் கொண்ட அல்லது இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டிருந்தால் கூட சிசேரியனுக்கு வந்திருக்காது. ஆனால் மேக்னாவிற்கு CPD செப்பலோ பெல்விக் டிஸ்பிரபேஷன் இருந்தது. அதாவது கர்ப்பபை எலும்பின் வாய்ப்பகுதி சிறியதாக இருந்தது ,கண்டிப்பாக சிசேரியன் தான் என்று டொக்டர் குணவர்தன் சொல்லியிருந்தார். கூடவே GDM அதாவது சர்க்கரை அளவில் கொஞ்சம் இருப்பதனால் நிச்சயம் குழந்தை கொஞ்சம் பெரிதாக இருக்கும், அத்தோடு பிளசண்டா ப்ரீவியா என்ற நச்சுக்கொடி பிரச்சினை வேறு இருப்பதனால் கண்டிப்பாக சிசேரின் தான் ,என்ன அக்நி பயப்படுறீங்களா என்றார்.

"இல்ல டொக்டர் நாங்க வேற காஸ்ட் அவ வேற காஸ்ட்,எனக்கு மேக்னா மட்டும்தான்."

"கூல் இது எனக்கு என்பதாவது சிசேரின் நான் உங்களை மாதிரி பயப்படுறனா பாருங்க என்று டொக்டர் மட்டும் சிரித்தார்.

                                   

கர்ப்பகாலத்தில் பொண்டாட்டி வயிற்றை தொட்டு தொட்டு பார்க்கிறது சொர்க்கம் என்றால் ,அவளை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு  வார்டுக்கு வெளியே வலிக்க வலிக்க காத்திருக்கது நரகம் மாதிரி தோணுச்சு.வெள்ளையோ கருப்போ, ஆணோ பெண்ணோ ஆண்டவா என் புள்ளையும் பொண்டாட்டியும் ஆரோக்கியமா இருந்தாலே போதும் என்று மாடனை கும்பிட்டுக்கொண்டான்.இதோ இன்னும் அரைமணித்தியாளத்தில் நான் அப்பாவாக போகிறேன் என்ற நினைப்பு வந்து வந்து நெஞ்சை கிள்ளியது. ஒரு மாதிரி கூசுவது போல உணர்ந்தான்.

தன் அப்பாவை நினைத்துப்பார்த்தான்.இப்போது வரை இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்று கூட தெரியவில்லை. எப்போதாவது "அரசே காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக்கொடு" என்ற பதாதைகளை தூக்கி கொண்டு கிளிநொச்சியில் வருடம் மூன்று முறை நடக்கும் போராட்டத்தில் தவறாமல் பங்கு கொள்வான். அங்கு யாராவது ஒரு தோழர் மைக்கை பிடித்துக்கொண்டு மிஸ்டர் அக்நி உங்களை டொக்டர் கூப்பிடுறார். நர்ஸ் நின்று கொண்டிருந்தாள்.

                                

அரக்கப்பறக்க டொக்டர் அறைக்குள் நுழைந்த போது, காங்கிராஜுலேஷன் உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் என்றார். "எங்கப்பா திரும்ப வருவாருன்னு எனக்கு தெரியும் டொக்டர்,என் வைஃப் எப்டிருக்காள்?"

"ஷீ இஸ் ஃபைன், பார்க்கலாம் உக்காருங்க,மிஸ்டர் அக்நி பிரசவம்கிறது ஒரு பெண்ணுக்கு,டொக்டர் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா? நான் பார்க்கலாமா?"

"ஸ்ஸுர் அதுக்கு முதல்ல, வார்டுக்கு எப்ப டொக்டர் கொணர்வீங்க?அனீமியா ஏதும் வருமா?"

"கூல் மிஸ்டர் அக்நி பத்துமாசம் பொறுத்துட்டிங்க,டொக்டர் ஒன்பது மாதம் பன்னிரண்டு நாள் நாலு மணித்தியாலம் இருபத்தஞ்சு நிமிஷம் பன்னெண்டு செக்கன் என்றான்.

சிரிப்பும் கோபமும் ஒருமிக்க வந்தது.

"சீ அக்நி,இந்த ஹொஸ்பிடல்கென்று சில ரூல்ஸ் இருக்கு,ஒவ்வொரு டெலிவரிக்கு பின்னாலும் கணவன்மார்கள் இங்கு இருக்கிற மெஷின் ரூம்குள்ள டென் மினிட்ஸ் இருந்தாகனும்."

"அதலாம் டென் டேய்ஸ் கூட இருந்துக்கலாம்,மேக்னாவை ஒரு வாட்டி பார்த்துட்டு."

"ப்ளீஸ் சிட்டவுன் அக்நி"

அக்நிக்கு இருப்புக்கொள்ளவில்லை பூச்சி முண்டியது.

"நேர்வஸ் ஆகாதிங்க, ஒரு டெலிவரிக்கு பிறகு ஒரு ஆண் தெரிஞ்சிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் அந்த அறைக்குள்ளே இருக்கு,அதற்குள்ளே நீங்க போனீங்கன்னா நீங்க கற்பனையில் நினைச்சு பார்க்க முடியாத பலவிஷங்கள் உங்களுக்கு புரியும்.

அக்நிக்கு கிட்டத்தட்ட கிருக்கே பிடித்துவிட்டது,அப்படினா எங்க அப்பாவை பார்க்க முடியுமா டொக்டர் என்றான். டொக்டருக்கும் பிடித்துவிடும் போல இருந்தது.

"இலங்கையில் மட்டும்தான் இந்த இயந்திர அரை இருக்கிறது,இதுல இருக்க இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா நீங்கதான் இந்த அறைக்குள்ளே போகபோகின்ற நூறாவது ஆள்,ஒரு அசல் உலகத்திற்கான அஸ்திவாரம் தான் இந்த அறை, ஆனால் ட்ரெஸ்ஸ கழற்றனும்"

"ஐயயே எண்ணாதீது.."

"உங்க வைஃப பார்க்கணுமா வேணாமா?"உடனடியாக அம்மணமாகினான். அறைக்குள் தள்ளி காதவடைத்தார்.

                                    

கும்மிருட்டாக இருந்தது. எத்தனை நீளம் அகலம் உயரம் ஆழம் எதுவுமே தெரியவில்லை.திக் திக்கென்று நெஞ்சடைத்து எச்சில் விழுங்கினான். பயம் உடலெங்கும் பரவி கூதலடித்தது. அடர்வணத்திற்குள் தனியே தொலைந்துபோனவன் போல பயந்து நடுங்கினான்.வியர்த்து வழிந்தது.அவனின் பின்னால் ஏதோ ஒன்று நெருங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்து திரும்பிப்பார்க்கும் செக்கனில் "தடார்"என்று மண்டையில் ஏதோ ஒன்று தாக்கி கண்ணில் மின்னல் மின்னி ஒரு புதைகுளிக்குள் தொப்பென்று மயங்கி விழுந்தான்.

நிமிடம்...

மணித்தியாலம்....

நாட்கள் சில நகர்ந்த பின்னர் மெலிதாக கண் திறந்தான். அவனின் பெயர் கூட மறந்து போய் இருந்தது. மெல்ல எழும்ப எத்தனித்து வலுவிழந்து வழுக்கி விழுந்தான். பசைபோன்ற பிசுபிசுப்பான திரவத்தால் அந்த அறை நிரம்பியிருந்தது. தலை மூழ்கும் பசைநீரில்கூட அவனுக்கு மூச்சிவிடவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

யார் நான்? சுத்தமாக மறந்து போயிருந்தான். யாரால் இங்கு வந்தேன் ஞாபகமில்லை. எழுபது கிலோவில் இருந்த அக்நி இரண்டு கிலோவாகியிருந்தான். இருநூற்றென்பது நாட்களில் இயந்திர அறை அவனை அப்படி மாற்றியிருந்தது.

தொட்டு பார்த்தான், அறையின் சுவர் அங்குமிங்கும் அசைந்தது. இடம் நெருக்கி தன் பலமுழுவதும் திரட்டி சுவரை எத்தியபோது அறையின் வெளியே யாரோ ஒருத்தி தொண்டை கிழிய அலறினாள். ஒரு உயிரின் அதிகபட்ச அழுகை அது. உருண்டு பிரண்டு அங்குமிங்கும் திரண்ட போது அங்கே தூரத்தில் ஒரு சின்ன துவாரம் தெரிய விருட்டென்று அதற்குள் தலைவிட்டு வெளியேற முயற்சித்த போது,ஒரு கிழட்டு கை அவன் தலையை வெளியே இழுத்தெடுத்து தலைகீழாக தொங்க விட்டு முதுகு தட்டி "ஏலே லிங்கம் உனக்கு பையன் பிறந்திருக்கான் என்று அந்த கிழவி சொன்னாள்.

கோபால் என்று கூப்பிட்டார் அக்நியின் தந்தை.

                                    

 

 லிங் சின்னா இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர். இலங்கை கதாசிரியனாக ஜனனி பத்திரிக்கையில் வேலை செய்தவர். (அம்மா ஈழத்தமிழர் அப்பா இந்திய தமிழர். )நான்கு குறும்படம் எடுத்ததன் பின்னர் சென்னையில் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு இன்னொரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

 

 

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு