ஜோக்கர்…(ஆனந்த விகடனில் வெளியான கதை..)


அடுத்த ஷோ துவங்க இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது, ஜோக்கருக்கு பதட்டம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான்… புகை கூடவே கொஞ்சம் இருமலையும் சேர்த்துக் கொண்டு வந்தது. இந்த ஊருக்கு வந்து டெண்ட் அடித்து பதினாறு நாட்கள் ஆகிப்போனது, வீட்டுக்கு இன்னும் பைசா அனுப்பவில்லை. முன்னெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி வந்துவிட்டால் திரும்பிப் போகும்வரை என்ன நடந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ரெண்டு மாசமோ, மூணு மாசமோ? எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.  இப்பொழுது ஐஞ்சு ரூவாய்க்கும் பத்து ரூவாய்க்கும் செல்ஃபோனைக் குடுத்துவிட்டார்கள். இதனால் யாருக்குத் தொல்லையோ இல்லையோ ஜோக்கர் அநியாயத்திற்குத் திண்டாடினான். தினம் நூறு வாட்டியாவது போஃன் பன்னி பேசாவிட்டால் அவன் பொண்டாட்டிக்குத் தூக்கம் வராது, “என்னய்யா செய்ற?  சாப்பிட்டியா?...” மத்தியானம் ரெண்டு மணிக்கு கூப்பிட்டாலும் இப்படித்தான் துவங்குவள் ராத்திரி பதினோறு மணிக்குத் கூப்பிட்டாலும் இப்படித்தான் துவக்குவாள். சில சமயம் ஷோவில் இருக்கும் போது தெரியாத்தனமாக பேண்ட்டிற்குள் போனை வைத்திருப்பான். பல்டியடிக்கிற நேரமாக போஃனடிக்கும் உடனே எடுக்கவும் முடியாது… அவன் பகுதியை முடித்துவிட்டு மீண்டும் வந்து போஃனை எடுக்கிற வரை போஃன் அடிக்கும். எதாவது அவசரமோ என பதட்டத்தோடு எடுத்தால் அவன் பொண்டாட்டி… “என்னாய்யா செய்ற?... புள்ள உன்னத்தான் கேட்டுக்கே இருக்கு…” அவனுக்குக் கடுப்பாகிவிட. “சனியனே….இவ்ளோ நேரமா கூப்புட்டும் எடுக்கலைன்னா   வேலையா இருப்பான்னு தெரிய வேணாம்…. சும்மா சும்மா என்ன வெங்காயத்துக்குப் போஃனடிக்கிற?...” அடுத்த நொடியே எதிர்ப்பக்கத்திலிருந்து அழுகை சத்தம் கேட்கும்… அது எப்படி இவளுக்கு மட்டும் நினைத்ததும் அழுகை வந்துவிடுகிறது. இவன் எதுவும் சொல்ல மாட்டான், “சரி… சரி புள்ளைக்கு… திங்க  எதாச்சும் வாங்கிக் குடு… நான் அப்பறம் பேசறேன்…” இதற்கு மேலும் பேசினால் அவள் சொந்தக் கதை நொந்த கதையெல்லாம் சொல்லி முடிக்க முக்கால் மணி நேரமாகிவிடும்.
     இன்று மதியம் ஷோ முடிகிற நேரமாக டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து இவன் போஃனை எடுத்துக்கொண்டு தவளை ரமேஷ் ஓடிவந்தான். அது என்னவோ ரமேஷ் என பெயர் வைத்திருக்கிறவன்களைக் கண்டாலே மூஞ்சியில் காறித்துப்ப வேண்டுமென்றும், சாகிறவரை அடித்துத் துவைக்க வேண்டுமென்றும் கோவம் வரும்… எல்லாம் இந்தத் தவளை ரமேஷால் வருவதுதான். அவன் பொதுவாக இவன் மீது எந்த அக்கறைகளும் காட்டுவதில்லை, ஜோக்கருக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே சின்னதாக இருந்தாலும் அந்தப் பிரச்சனையை எப்படிப் பெரிதாக்குவதென யோசித்து வந்து அதை செயல்படுத்திவிடுவான். அவனோடு பெரிய பிணக்கு எதுவுமில்லை, இவனை இப்படி நோண்டிக்கொண்டிருப்பதில் அவனுக்கு அப்படியொரு சந்தோசம். போஃனை எடுத்ததும் “காடு ஆறு மாசம்.. வீடு ஆறு மாசம்னு சுத்தற பொழப்பு ஒரு பொழப்பாய்யா?... சரி போறதுதான் போற… வீட்டுக்கு செய்றது செஞ்சுட்டுப் போக வேணாம்.. ஒனக்கெல்லாம் என்னத்துக்குப் பொண்டாட்டி?...” இப்படியொரு மூர்க்கமான தாக்குதலை அவனது பொண்டாட்டியிடமிருந்து அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அது எப்படியோ பதினைந்து நாளைக்கு ஒருமுறை மூவாயிரம் குடுத்தால்தான் குடும்பம் நடத்த முடிகிறது. இத்தனைக்கும் வீட்டில் பொண்டாட்டியும் மகளும் மட்டுந்தான். “வரும்போதுதானடி காசு குடுத்துட்டு வந்தேன்… அதுக்குள்ள என்ன எழவுன்னு இப்ப கேக்கற?.... இங்க என்ன அச்சா அடிக்கிறேன்… நீ கேட்டதும் எடுத்துக் குடுக்க?....” அவன் பொண்டாட்டி விடுவதாயில்லை… “நீ குடுக்கற காச என்ன நான் அவிச்சா திங்கறேன்…. வெலவாசி அம்புட்டு விக்கிதுய்யா…. பாலு வெல தெரியுமா?.... பேசற பேச்சு…” பால் விலையா இவ்வளவு செலவுக்கும் காரணம்?... “நாம கெட்ட கேட்டுக்கு பாலு ஒரு கேடா?... அதான் ரேசன் கடைல அரிசி ஒரு ரூவாய்க்குத் தராய்ங்கள்ல அப்பறம் என்ன?...” அவன் இப்போதைக்குத் தப்பித்தால் போதுமென்று ஒன்றைச் சொல்ல “ஒரு ரூவாய்க்கு அரிசி வந்துட்டா… மத்த சாமானெல்லாம் உங்கப்பனா வந்து குடுக்கறான்?... நானும் எல்லாத்தயும் வித்துட்டுத்தான் குடும்பத்த ஓட்டறேன்…. இன்னு விக்கிறதுக்குத் தாலிதான் இருக்கு…. இன்னும் ரெண்டு நாள்ல ரூவா அனுப்பல… அததேன் விக்கனும்…” சொல்லிவிட்டு போஃனை வைத்துவிட்டாள். சாப்பிட்ட கொஞ்ச நஞ்ச சோறும் இப்பொழுது வாந்தி வருவது போலிருக்க ஷோ  துவங்க டைம் ஆகிவிட்டதென பெல்லடித்துக் கொண்டிருந்தார்கள். முகமூடி போட்டுக் கொள்வதாலேயே பல சமய்ங்களில் இவன் படும் துயரங்கள் எதையும் வெளி உலகம் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதையும் மீறி சில சமயங்கள் நிஜமாகவே கண்ணீர் வரும்… மனசு வேலை செய்யும் போதுதான் கண்டமாதிரி அலைபாயும்…. எவ்வளவோ குழந்தைகளை சந்தோசப்படுத்துகிறான். அவன் குழந்தை?... பிள்ளையை பற்றி நினைக்கிற போதெல்லாம் தன்னையும் மீறி அழுதுவிடுவான்… அவன் கண்ணீர் முகத்தில் வழிந்து இறங்குகையில் ஜோக்கரின் நடிப்பை மெ.ச்சி கை தட்டல் பலமாகும்… கை தட்ட தட்ட சில சமயங்கள் அழுகை அதிகமாகியபடியே இருக்கும். அன்று முழுக்க எந்தக் குழந்தைகளைப் பார்த்தாலும் பிள்ளையின் நினைப்பாகவே திரிவான்.
     இன்று ஷோ முடிந்ததும் கொஞ்சம் பணம் கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டான். இவனுக்கு தன் பிள்ளையோடு விளையாட அவ்வளவு பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் அவன் வீட்டில் இருந்ததில்லை. ஏதாவதொரு ஊருக்கு கம்பெனி கிளம்பிவிடும். இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டுப் போகலாமென்றால் வீட்டில் தாங்காது… பல சமயங்களில் வேறு ஏதாவது தொழில் செய்திருக்கலாமோ என்று படும்… ஆனால் இதில்தான் தான் சந்தோசமாய் இருப்பதாய் நினைத்தான். ஷோ துவங்கிவிட்டது. எப்போதுமே முதலில் கொஞ்ச நேரம் ஜோக்கர்தான் காமெடி பண்ண வேண்டும்… இன்று பணம் கேட்க வேண்டுமென்பதால் கொஞ்சம் ஆர்வமாகவே எல்லாவற்றையும் செய்தான். கைதட்டல் வழக்கத்தை விட பலமாயிருந்தது. வழக்கமாக பல்டியடிக்கும்போது இருக்கிற வேகத்தை விட இன்று அதிகமாயிருந்தது. அவனைத் தொடர்ந்து யானையைக் கூட்டிக் கொண்டு அடுத்த ஆள் உள்ளே வர, இவன் சின்னதொரு ஓய்விற்காக டிரஸ்ஸிங் ரூமிற்குப் போனான். எல்லோரும் ரெடியாகியிருந்தார்கள். வழக்கமாகப் பேசும் சில வார்த்தைகள். தவளை ரமேஷ் “என்ன ஜோக்கர் அண்ணே… இன்னைக்கி வீட்ல இருந்து மதினி போஃன் வரவும் ஆட்டம் பிரமாதமா இருந்துச்சு போல…” குத்தலாகக் கேட்டான். அப்படியே அவன் வாயில் ஒரு குத்துவிடலாமா என்று இருந்தது. இவன் சிரித்தபடியே நகர்ந்து போய்விட்டான்.
     மேனேஜர் அடுத்தடுத்து யாரெல்லாம் போக வேண்டுமென வரிசையாக சொல்லிக் கொண்டு இருந்தார். அது ஒன்றும் கம்பசூத்திரமல்ல, தினமும் செஞ்சு பழக்கப்பட்டுப் போனதுதான். ஆனாலும் தனது கடமையில் சற்றும் மனந்தளராத உத்தமன் மேனேஜர்… ஜோக்கர் பட்டும் படாமல் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருக்க “என்னய்யா என் பின்னாலயே திரியற?... சீக்கிரம் போ… நீ இங்க வந்து நிக்கலாமா?....” ஜோக்கர் சிரித்தான்… யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு “ஒன்னுமில்ல ஸார்… இன்னைக்குக் கொஞ்சம் பணம் வேனும்.. வீட்ல புள்ளைக்கு மேலுக்குச் சொகமில்ல….” மேனேஜருக்கு கடுப்பானது… “யோவ் காசு கேக்கற நேரமாய்யா இது?... போய்யா… போய் வேலையா பாரு…. “ ஆளை இப்போது பிடித்தால் ஆச்சு என்கிற பதட்டத்தில் தான் ஜோக்கர் இங்கயே வந்து சொன்னான். மேனேஜர் பேசுவதைப் பார்க்கையில் காசு வருகிற மாதிரித் தெரியவில்லை. என்ன நடக்கிறதோ நடக்கட்டுமென மீண்டும் கிரவுண்டுக்குப் போனவனை தவளையன் “என்னண்ணே நிறயக் கிடச்சதா?...” கேட்ட வேகத்தில் அவனது மூக்கில் ஒரு குத்து விட்டான். ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக.. வரிசையாய் குத்துகள்…. அவன் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது… முதல் குத்தை பொண்டாட்டியை நினைத்தும், இரண்டாவது குத்தை மேனேஜரை நினைத்தும் மூன்றாவது குத்தை பால்விலை, பஸ்டிக்கெட், பருப்புவிலை… இப்படி எல்லாக் கன்றாவியின் விலையையும் கூட்டியவனை நினைத்துக் குத்தினான். எல்லோரும் வந்து விலக்கிவிட்டும் கூட அவனால் நிறுத்த முடியவில்லை… மேனேஜர் ஜோக்கரின் முகத்தில் தெரிந்த குரோதத்தைக் கண்ட பயத்தில் எதுவும் பேசவில்லை… “ஏண்டா என்னப் பாத்தா எல்லாப் பயலுக்கும் எளக்காரமா இருக்கா?...” அவன் இதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். ஜோக்கரின் புண்ணியத்தில் தவளை பெர்ஃபாமென்ஸ் மட்டும் கேன்சலாகி விட்டது.
     மேனேஜர் என்ன நினைத்தானோ ஷோ முடிந்ததும் ஜோக்கரைக் கூப்பிட்டு “இந்தாய்யா உனக்குத் தரவேண்டிய சம்பளம் நாலாயிரத்தோட சேர்த்து கூடுதலா ஒரு பத்தாயிரம் இருக்கு… எடுத்துக்கிட்டு வவுச்சர்ல கையெழுத்துப் போடு…” ஜோக்கரின் மூஞ்சியைப் பார்க்கவே இல்லை… ஜோக்கர் சிரிக்க வைக்கவும் அழகவும் தான் இருக்க வேண்டும், வன்முறையாளனாய் இருப்பதா?... கையெழுத்துப் போடும்போது மனம் முழுக்க ஜோக்கருக்கு பட்டாம் பூச்சி பறந்தது. கையெழுத்துப் போடுகிற போது மட்டுந்தான் ஜோக்கர் மணி என ஜோக்கரோடு சேராமல் மறைந்து போன தன் பெயர் அவனுக்கே நினைவுக்கு வருகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பப் போனவனை “இப்பிடி அடிக்கிறது, மல்லுக்கட்டுறதுன்னு இருக்க ஆளுக நம்மளுக்கு சரிப்படாதுப்பா… நீ வேற கம்பெனி பாத்துக்க… சொல்றதுக்குத்தான் வரச்சொன்னேன்….” வவுச்சர் புக்கை எடுத்து வைத்துவிட்டு மேனேஜர் வேகமாய் எழுந்து போனான். இவனால் அந்த வார்த்தைகளை இன்னும் முழுமையாய் செரிக்க முடியவில்லை. வேறு கம்பெனியா?... இவனுக்கு வேறு வேலை எப்படித் தெரியாதோ அப்படியே வேறு கம்பெனியும் தெரியாது… விவரம் தெரிந்த நாளிலிருந்து இதே கம்பெனியில்தான் வேலை செய்கிறான்… ஜோக்கராகவே வளர்ந்து, ஜோக்கராகவே கல்யாணம் கட்டி ஜோக்கராகவே அப்பாவாகி ஜோக்கராகத்தான் சமூகத்தின் ஒரு மனிதனாகியிருந்தான். இப்பொழுது என்ன செய்வது?... ஓடிப்போய் மேனேஜரின் காலில் விழுந்தான்… “அய்யா தெரியாம செஞ்சுட்டேன்…. உங்களுக்கேத் தெரியும்… அந்தப்பய எப்பப் பாத்தாலும் என்னய நோண்டிக்கிட்டே இருக்காங்கறது… இன்னைக்கு கோவத்துலதான் அடிச்சிட்டேன்… இனிமே நடக்காம பாத்துக்கறேன்யா…. மன்னிச்சுக்கங்கய்யா…” கத்திப் பார்த்தான்.. “ஆமாய்யா இன்னைக்குக் கோவத்துல அவன அடிச்ச…. நாளைக்கு என்னய அடிப்ப… இதெல்லாம் சரிப்படாதுப்பா…” இனி எவ்வளவு அடித்தாலும் ஜோக்கர் வாங்குவான். அதிகாரமென்னும் சாட்டை மேனேஜரிடமிருந்தது. அதை முயன்றவரை சுழற்றவே விரும்பினான். எப்படி விலைவாசி உயர்த்துகிற அதிகாரம் இருக்கிறவர்கள் சாட்டையை சுழற்றுகிறார்களோ அதே மாதிரி… ஜோக்கருக்குக் கெஞ்சி, அழுது தொண்டைத்தண்ணீர் வற்றிவிட்டது.. மேனேஜர் இறங்கி வருவதாயில்லை. அவன் கிளம்பிப்போய்விட்டான்.
     வீட்டிலிருந்து பொண்டாட்டி வரிசையாய் போஃனடித்துக் கொண்டிருந்தாள். அவன் எடுக்கவே இல்லை. அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இரவு முழுக்க உட்கார்ந்திருந்தவன் சோடியம் விளக்குகளினூடாய் பெய்து கொண்டிருந்த பனி மழையை பார்த்தபடி அடுத்து என்ன செய்வதெனத் தெரியாதவனாய் இருந்தான். அதிகாலையில் வந்த முதல் பேருந்திலேறிக் கொண்டான்… எல்லாம் சரியாகிவிடும்… ஓடிப்போய் குழந்தையின் மடியில் விழுந்து அழுது புரண்டு விளையாடினால் எல்லாம் சரியாகிவிடும். டிக்கெட் எடுப்பதற்காக கண்டக்டரிடம் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான். திருச்சியிலிருந்து தேனி போகும் வண்டி…. “தேனி கலெக்டர் ஆபிஸ் ஒன்னு குடுங்க ஸார்….” கண்டக்டர் ரூவாயை வாங்கிக் கொண்டு “எண்பத்தி மூணு ரூவாப்பா…” இவனுக்குப் புரியவில்லை. “எம்பத்தி மூணு ரூவாயா?... போன மாசமெல்லாம் நாற்பத்து ரெண்டு ரூவாய்க்கித்தான் போனேன்…. நீங்க இம்புட்டுக் காசு கேக்கறீங்க…?” கண்டக்டருக்கு எரிச்சலாகிவிட்டது. “யோவ் நீ நெசமாவே இதுக்கு முன்னால பஸ்ல போயிருக்கியா?... இல்ல பொய் சொல்றியா?... டிக்கெட் விலய ஏத்தி இருவது நாளாச்சு……” ஜோக்கரும் விடுவதாயில்லை…. “ஏத்த வேண்டியதுதான், அதுக்காக இருந்தது மாதிரி ரெண்டு மடங்கு கேட்ட என்னண்டுய்யா கஞ்சி குடுக்கறது?.... நான் அம்புட்டுக் காசெல்லாம் தரமுடியாது… ரூவா என்ன தெருவுலயா கெடக்கு?...” கண்டக்டர் விசிலடித்து வண்டியை நிறுத்தினான். “நீ இறங்கி மெதுவா நடந்தே ஊருக்குப் போ….” சொல்லி முடிக்கும்போதே ஜோக்கர் அவன் மூஞ்சியில் குத்தினான். “ஏண்டா அப்பிராணி சப்பிரானியா இருந்தா எல்லாப்பேரும் ஏமாத்துவீங்களா?... ஏமாத்துவீங்களா?....” பஸ்ஸில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறதெனத் தெரியவில்லை. எல்லோரும் வந்து விலக்கிவிட்டனர்…. “யோவ் விடுய்யா…. விடுய்யா… பஸ் டிக்கெட் கூடிப்போச்சுன்னா அதுக்கு கண்டக்டர் என்னய்யா செய்வாரு… போய் அதிகாரிக கிட்ட சண்ட போடு….” சட்டையைப் பிடித்து இவனை இழுத்து விட்டதில் இவன் சட்டை கிழிந்தது. ஜோக்கருக்கு இன்னும் கோவம் குறையவில்லை. இந்த சமூகத்திலிருக்கும் எல்லோரும் தன்னை ஏமாற்றுகிறார்களென உறுதியாய் நம்பினான். பேருந்து அவனை அந்த அர்த்த ராத்திரியில் இருள் நிரம்பிய சாலையில் இறக்கிவிட்டுச் சென்றது. வீட்டிற்குப் போக இருந்த சந்தோசமும் குழந்ந்தையைப் பார்க்க இருந்த சந்தோசமும் கண்டக்டரோடு சண்டை போட்டதில் காணாமல் போய்விட்டது.
     காலை இவன் வீட்டிற்குப் போகும் போது அரை உயிராய்ப் போனான். எதிர்பாராமல் இவனைப் பார்த்த அவன் பொண்டாட்டி இவனுக்கு எதுவோ ஆகியிருக்குமென…”யாத்தி என்னய்யா ஆச்சு… ஏன் மூஞ்சியெல்லாம் இப்டி இருளடஞ்சு கிடக்கு…. மேலுக்குச் சொகமில்லயா?.,..” சேலைத் தலைப்பால் மூஞ்சியைத் துடைத்துவிட்டான்… சுருட்டியிருந்த வேஷ்டி மடிப்பிலிருந்து ரூவாயை எடுத்துக் குடுத்தான். காசை வாங்கி எண்ணிப் பார்த்தவள் “எதுக்குய்யா இம்புட்டுக் காசு?... மேலுக்கு என்ன… ஏன் ஒரு மாதிரியா இருக்க?...” ஜோக்கர் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு முத்தமிட்டான். அந்தப் பிள்ளை அவனோடு பிண்ணிப் பினைந்து கொண்டது. ஒரு சொம்பு நிறைய நீராகாரம் எடுத்து ஜோக்கரிடம் அவன் பொண்டாட்டி நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் குடித்தவனுக்கு அந்தக் குழுமை சந்தோசமாய் உள்ளிறங்கியது. திரும்பி அவளைப் பார்த்தவன் “இனிமே சர்க்கசும் இல்ல… ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… வேற பொழப்பத்தான் பாக்கனும்….” அவனால் பொண்டாட்டியின் மூஞ்சியைப் பார்க்க முடியவில்லை. அவளுக்குத் தெரியும், இவனுக்கு அதை விட்டால் எந்த வேலையும் தெரியாது. எல்லோரையும் சந்தோசப்படுத்துவதை பெருமையான வேலையாய் நினைத்துச் செய்கிறவன்… எதன் காரணத்தால் இப்பொழுது இப்படி ஆகியிருக்கிறது.?
     பத்து நாட்கள் எங்கும் போகவில்லை. வீடு அவனை முழுமையாய் அரவணைத்துக் கொண்டது. சர்க்கசில் என்னவெல்லாம் செய்தானோ அதை வீட்டில் பிள்ளையின் முன்னால் செய்து காட்டினான். குழந்தை எல்லாவற்றையும் ஆவெனப் பார்த்தது, சிரிக்கவே இல்லை. இவனுக்கு ஏன் அவள் சிரிக்காமல் இருக்கிறாளெனத் தெரியவில்லை. தனது அதிகபட்சமான அத்தனை வித்தைகளையும் செய்து காட்டியும் அவள் சிரிப்பதாய் இல்லை. முதல் இரண்டு நாட்கள் எப்படியும் அவளை சிரிக்க வைத்துவிடலாமென நம்பியவன் என்ன செய்தும் சிரிக்க முடியவில்லை என்றானதும் அவள் முன்னால் வித்தை செய்வதை நிறுத்திவிட்டான். குழந்தையிடம் வேறு எப்படி அன்பு காட்டுவதெனத் தெரியவில்லை. அவளுக்கு என்ன விளையாட்டுப் பிடிக்கும்?... அவன் பொண்டாட்டி வெறுமனே கிச்சு கிச்சுக் காட்டினாள் கூட அதற்கு சந்தோசமாய் அந்தக் குழந்தை சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தது. இவன் என்ன செய்தாலும் அப்படியே இருக்கிறாள்.. என்ன செய்வதெனத் தெரியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் அமைதியாய் இருந்தான். வீட்டிலிருப்பது துயரமாகிவிட வாழ்வில் முதல் முறையாய் வேலை தேடி தெருவில் இறங்கினான்.
     விலைவாசி உயர்ந்ததாலேயே மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து விட்டதோ என்னவோ?... ரெண்டாயிரம் ரூவாய்க்கும் மூவாயிரம் ரூவாய்க்கும் யாரும் எந்த வேலைக்கும் போகத் தயாராயில்லை. அதனாலேயே அந்த வேலைகளெல்லாம் இவனுக்குத் தாராளமாய் கிடைத்தன. மூவாயிரம் ரூவாயை வைத்து எப்படிக் குடும்பம் நடத்துவது?... ஒரு காட்டன் மில்லின் நைட் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள் நாலாயிரம் சம்பளம், ஒரு வேளைச் சாப்பாடு. இப்போதைக்கு இது பரவாயில்லையென மனசில்லாமல் போனான். வேலை அப்படி ஒன்றும் பெரிதாக இல்லைதான், ஆனால் யாருமே இல்லாமல் அனாதையாய் இருப்பதாய் உணர்ந்தான். தன்னைச் சுற்றி எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த சிரிப்புச் சத்தமில்லாமல் சூன்யம் பிடித்தது போலாகிவிட்டது. தன் மூஞ்சியைப் பார்க்க அவனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அதில் சந்தோசமோ நிம்மதியோ எதுவும் இல்லை. அவன் பிள்ளையிடம் விளையாடவே அச்சமாயிருந்தது. அவளாகவே ஓடிவந்து இவனிடம் ஒட்டிக்கொண்டாலும் அவளைத் தவிர்த்தான். “புள்ள எவ்ளோ ஆசயா ஓடியாந்து உக்காருது…. தூக்கேன்யா…” பொண்டாட்டி சொல்கிற பொழுதெல்லாம் அமைதியாய் அவளை வெறிப்பான். அவனுக்கு மற்றவர்களின் சிரிப்பு சத்தம் கேட்காமல் சிரிப்பது மறந்து போயிருந்தது.
     மகளின் பள்ளிக்கூட விழாவில் நிகழ்ச்சி நடத்த ஜோக்கரைக் கூப்பிட்டிருந்தார்கள். அவனுக்கு விருப்பவே இல்லை, போனால் ரெண்டாயிரம் ரூவாய் குடுப்பார்களென்றதால் வழியே இல்லாமல் போனான். ரொம்ப நாளைக்குப் பிறகு வேஷங்கட்ட எந்தச் சிரமமுமில்லை, கை தானாகவே எல்லாவற்றையும் செய்தது. மிக அனிச்சையானதொரு செயலாய். குழந்தைகள் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் இவனுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது. சீக்கிரமாகப் போகவேண்டுமென வேகமாய் ரெடியானான். குழந்தைகளுக்கு நடுவில் போய் நின்றதும் அப்படியொரு கைதட்டல். எல்லோருமே சந்தோசக் கூச்சலிட்டார்கள். கூட்டத்தில் வேகமாய் கண்கள் தனது மகளைத் தேடின. அந்தக் குழந்தை எப்பொழுதும்போல் அமைதியாய் அப்படியே இருந்தது. ஜோக்கருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வழக்கமாய் செய்கிற ஒவ்வொரு வித்தையாய் செய்தான். செய்ய செய்ய குழந்தைகள் சிரித்து உருண்டனர். ஒவ்வொரு வித்தையைச் செய்யும் போதும் தனது மகள் சிரிக்கிறாளாவெனப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் சிரிப்பதாகவே இல்லை. கடைசியாய் இவன் பல்டியடிக்கும் ஒரு வித்தை செய்யும்போது தவறி விழுந்து அழுகிறபோது அவன் மகள் சிரித்தே விட்டாள். ஜோக்கருக்கு தான் நின்றிருக்கும் நிலம் அப்படியே ஒரு பத்தடி உயரமானது போலிருந்தது. கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்தது. “என் மக சிரிச்சிட்டா… என் மக சிரிச்சிட்டா… என் மக சிரிச்சிட்டா…” இந்த நிகழ்ச்சியை முடிக்கவே கூடாது என நினைத்தான் . ரொம்ப நாளைக்குப் பிறகு ஜோக்கராய் இருப்பதற்காக சந்தோசப்பட்டான்…..

Comments

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....

நொண்டிக் கருப்பு