நீலநதி
லக்ஷ்மி
சரவணகுமார்.
சுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும்
வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நித்சலனம். மூன்று தினங்களாய்ப்
பெய்தோய்ந்த பெருமழைக்குப் பின்பாக தளிர்த்திருக்கும் கரையோர நாணல்களின்
பச்சையினூடாய் சகதிக்கால் நகர்த்தி வந்துகொண்டிருக்கிறானவன். மாதங்களுக்கு
முன்பாய் நீர்வரத்தற்றப்போய் ஆள்நடமாட்டமின்றி நாதியற்ற இக்கரையில் ஓடுகளாய்
எஞ்சிய நண்டுகளையும் சிப்பிகளையும் பொறுக்கி சகதிநீர் ஊறும் சிறு சிறு
நீர்பரப்பில் விட்டுவந்திருந்தான். எப்படியும் வாய்க்கும் உயிர்ப்பென்னும்
நம்பிக்கையுடன். நீரூட்டம் பெருகுவதற்கு சமீபமான தினங்களில் தன் வீட்டின் பால்கனி
முகப்பிலிருந்து வினோதமான உருவங்களின் அசைவுகளை நதியில் கவனித்தவனுக்கு
உறக்கமின்மை வளர்ந்தது. முதலில் நாளுக்கு சில மணிநேரங்களெனவும் பின்வெகு வேகமான
தீவிரத்தில் பெருகிய உறக்கமின்மை சில நிமிடங்களுக்கான உறக்கத்தினை மட்டுமே தந்தவனை
கபளீகரம் செய்திருந்தது.
கொம்புகள் சூடுவைக்கப்பட்ட உழவுமாடுகளின்
அசைவற்ற கண்கள், நாள்பட்ட ரோகிகளின் நாற்றம் பீடித்த தாவரங்கள், கடல் கடந்த
தேசத்தின் தேக்கு மரங்களின் ஆவிகுடித்த நூற்றாண்டு கால கட்டில் நாற்காலிகளை அவ்வறை
நிராதரவானதொரு வெளியாய் மாற்றிக்கொண்டிருந்தது நதிநீர் அவனுறக்கத்தில். உறங்கி
விழிக்கிற கனங்கள்தோறும் அதிர்ச்சியுற்றவனாய்த் தம் படுக்கையிலிருந்து எழுந்தோடி
வருபவன் கண்சாட்சியாய் கண்டும் நம்பவியலாதவனாயிருந்தான் அவ்வூரின் இருப்பை.
சிதைவுகளின்
நெடியப்பிய புளிப்பு மனிதனாய் முழுக்க நீர்மை படர்ந்துவிட்டிருந்தது மேனியில்.
முடிவுறாத கனவுகளின் நீள்நாவுகள் விருப்பத்துடன் வருடியதில் இளஞ்சூடாய்
பரவிப்பெருகியது நஞ்சு. தனக்காக கிடத்தப்படும் படுக்கையில் நெடுநாள்
பாதுகாக்கப்படும் சவத்தின் துர்வாடையினையும் ஸர்ப்பங்கள் புணர்கையில் வெளிப்படும்
மூர்க்கமும் பிண்ணிக்கிடந்ததாய் உணர்ந்தவனுக்கு கைவிரல்கள் மெலிந்து உதிரம்
கட்டிப்போயிருந்தது. புதுவகையான நோயெனக் கருதி மேற்கொண்ட வைத்தியத்தில் மருந்துகள்
கொடுக்க முடிந்ததெல்லாம் மிகுதியான தளர்வினையும் உடல்நடுக்கத்தினையும்தான்.
நாற்பது வயதிற்கு சமீபமாய்
வந்திருந்தவனின் மயிர்க்கற்றைகள் இயல்பிற்கதிகமாய் நரைத்துப் பூத்திருந்தது.
தனித்துவமான உடல்வாசனையென சொல்ல முடியாத அவனின் கபாலத்தில் மட்டும் நாகலிங்கப்
பூக்களின் மகரந்த வாசனை. நிறமும் கூட பூர்ணமான வெள்ளையின் ஊடுபரவலாய் மெல்லிய
பொன்னிறமாகவேயிருந்தன மயிர்கள். ஊரில் எஞ்சிப்போயிருக்கும் கடைசிக் குதிரைக்காரன்
முத்துக்கிழவனின் வண்டியில் போட்டு வைத்தியத்திற்கு அழைத்துப்போன நாட்களில்
திரும்பி வரும் வரையிலும் அவ்வூர் பாதுகாப்பாயிருக்குமென உறுதியில்லை
அவனிடம். அரைமனதாய் சம்மதித்துச் சென்றவன் சிலமுறைகளுக்குப்
பின்பு தனக்குக் குணப்படுத்தும்படியான நோயெதுவுமில்லையென எங்கும் வர
மறுத்துவிட்டிருந்தான். அபரிமிதமான சிதைவினை வெளிக்கொண்டிருப்பது
தேகமாயிருப்பினும் அவனை வருத்திக் கொண்டிருப்பது
மனமாக மட்டுமேயிருக்க முடியுமென நிச்சயமாக நம்பினர் வீட்டில். சில தினங்களுக்கு
தள்ளிவைக்கப்பட்டன வைத்யமும் மருந்துகளும். அவனுக்காய் வாங்கி வைக்கப்பட்டிருந்த
பச்சைநிற லேகியங்கள் பாதி பயன்படுத்தப்பட்டு நிறம்மாறி நீலமாகிப்போயிருந்தது.
2
ஊரின் சாணம்
மணக்கும் அதிகாலை வீதிகளில் குளித்து முடித்து வசீகரமாய் ஊரெழுப்பும் தேவதாசிகளின்
இருப்பு பல காலங்களுக்கு முன்பே முடிந்துபோய்விட்டிருந்த்து. அவர்களுக்கென
அழகூட்டப்பட்டிருந்த வீதி இன்று ஊர்க்காரர்கலின் ஆக்கிரமிப்பில் உருவிழந்து
தன்னியல்பின்றியும் முகமற்றதாகவும் போனது. எவர்பொருட்டும் அக்கறை கொண்டிரவியலாத ஏமாற்றங்கள்தான்.
காலத்தின் மிச்சத்தினை மிக மெதுவாக பிரிய போராடிக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின்
ஈரப்பசையோடு நிறுத்தி வைத்திருக்கிறாள் கடைசி தேவதாசியான ராஜம்மாள்.
இப்படியொருத்தி இருப்பதனை ஊரில் அறிந்திருப்பவர்கள் வெகுசிலர்தான்.
விடிகாலையினைப்
பற்றின குழப்பங்கள் துளியுமின்றி கிடந்த முந்தைய இரவின் கடைசி மணிநேரத்தில்;
நிரந்தர துயில்கொள்ள வேண்டி கண்மூடியிருந்தாள். வேறெந்த நினைவுமின்றி
வதங்கியிருந்த உடலில் தளர்வும் சோர்வும் சரிபாதியனவைகளாய் சூழ்ந்திருந்தன.
உயிர்ப்பின் மொத்த எடையையும் சொல்லிவைத்தாற்போல் ஸ்வீகரித்துக் கொண்ட வெண்மயிர்கள்
புரண்டு மணற்துகள்களற்ற சிறு அலைகளென புரண்டுகிடந்தது படுக்கையில். இசையின்
பரவசத்தில் கால் மாற்றி காலாடும் அவளின் அங்கத்தினை பூர்ணமாக ரஸித்திருந்த
அவ்வறைச் சுவர்கள் விடுபடுதலின் துயரில் பொழிவிழக்கத் துவங்கின. ஊருக்குள் கசிந்த
இவளின் மரணச்செய்தி பலகாலத்திற்கு முந்தைய நினைவுகளை சிலருக்குத்
திருப்பிவிட்டிருக்க அவரவர் நினைவுகளிலிருந்து நிறம் மாறத் துவங்கியிருந்தது ஊர்.
திருவையாறின்
தாசித்தெரு தன் ஆகயிறுதியான இருப்பையும் இழந்த தினத்தில் ஆற்றின் நீர்மட்டம்
மிகுந்து ஊரெல்லைக்குள் கசியத்துவங்கியிருந்தது நீர். குளிர்காலத்தில் பூச்சிகள் புகுந்துவிடாது தடுக்க
இரும்புச்சட்டங்களால் அடைக்கப்பட்டிருந்த ஜன்னல்களின்வழி அந்தக் காலையின்
வெளிச்சம் அவ்வறையில் ஊர்ந்து பரவியது. நெடுந்தொலைவிலிருந்து வரவேண்டிய
உறவுக்கார்ர்களுக்குத் தகவல் அனுப்ப்பட்டுக்கொண்டிருந்தது. ஒப்பாரி பாடவந்த
தெருப்பெண்களின் குரல்களில் சுதியில்லை. ராஜம்மாளின் பாதிவயதுகூட இல்லாதவர்களாய்
அவர்களிருந்த்தால் பாடுவதற்குத் தோதான வார்த்தைகள் அவர்களுக்குக்
கிடைத்திருக்கவில்லை. தலைமாட்டில் புகையும் சைக்கிள் பிராண்ட் ஊதுபத்திகளின்
வாசனைக்கும் அறையெங்கும் பரப்பப்பட்டிருக்கும் மட்டமான அத்தரின் வாசனைக்கும்
விழித்திருந்தாள் களிநடனம் கொண்டிருப்பாள் ராஜம்மாள். முதுமையின் எல்லாப்
பொழுதுகளிலும் அவ்வீட்டில் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருந்த அவள் நடனத்தில்
நிகழ்த்துபவளும் ரசிப்பவளும் அவள் ஒருத்தியாக மட்டுமேயிருந்தாள். தான் நிகழ்த்தி
தானே ரஸிப்பதில்தான் தேவதைகள் தங்களை உணர்ந்துகொள்கிறார்கள். ஒரு காலுயர்த்தி
இன்னொரு கால் தரை பாவ கையால் உயர்த்திய காலைப் பிடித்துத் தலைதிரும்பியாடுகையில் புருவங்கள் முதற்கொண்டு
வெளிப்படுத்தியபடியிருக்கும் நூற்றாண்டுகளின் காமத்தினை.
நோய்மை அவளுடலை எவ்விதத்திலும் சிதைத்திருக்கவில்லை. ஒரு
பிற்பகல் வாயில் ஏதோ முனுமுனுத்தபடியே படுத்துக்கொண்டிருந்தவள் இரண்டு கால்களையும்
மெதுவாகத் தூக்கி படுத்த நிலையிலேயே கொள்ளும் தனக்கு விருப்பமானதொரு நிலையில்
முழுக்கப் பூத்திருந்த தன் கேசத்தினை படரவிட்டிருந்தவளின் உடலுக்கு
மீறியதாயிருந்த்து கேசம். வினோத மலர்களின் வாசணையறிந்து வரும் ஸர்ப்பமென நோய்மை
இவளுடலின் மலர்தலில் மிகவேகமாய் தொற்றிக்கொண்டது அக்கனத்தில்தான். அப்படியானதொரு
நிலையிலேயே இருப்பதற்குத்தான் விரும்பினாள். முரட்டு யானைகளின் இழைக்கப்பட்ட தந்தத்தில்
வார்த்த அவள் கால்களின் மிகமெதுவான அசைவில் அவ்வறை நாணங்கொண்டு இருண்டது. அவள்
கால்களிலிருந்து கசியும் பேரொளி நொடியில் யாரொருவரையும் குருடாக்கிவிடக்கூடும்,
ஒளிர்ந்து தன் பொலிவை கசியவிட்டிருக்கும் அதன் வழவழப்பின் ஆர்வத்துடன் நகர்ந்தது
அவளின் பார்வை. தன்னுடலின் ஒவ்வொரு அசைவிற்கும் நூறாயிரம் அர்த்தங்களை
வெளிப்படுத்த மிகச்சிறிய வயதிலேயே பழகியிருந்தவளுக்கு அதன் மூர்க்கமும் நிதானமும்
பழக்கப்பட்டுப் போனதுதான். வருடங்களாய் ஆடிச்சுழன்ற பாதங்களவை.
3
அனந்தனுக்கு கன்னித்தீட்டு என்றனர். அனந்தனுக்கோ, அனந்தனின்
குடும்பத்தினருக்கோ முகந்தெரியாத
அக்கன்னியின் மீது கோபமோ வருத்தமோ யாதொன்றுமில்லை. அவன் நோய்மைக்குப்
பழக்கப்பட்டுப் போகக்கூடுமென வைத்தியர் அவனை சந்தித்த முதல் தினத்திலேயே சொன்னது
குறித்தான தெளிவுகள் எதுவும் இல்லாததால் அப்படியெதும் நடக்காதென்றுதான்
நினைத்திருந்தார்கள். ரங்கூனின் தேக்கு மரங்களைச் சுமந்திருக்கும் அவ்வீட்டின்
தூண்களுக்கு இவன் சமீபமாகத்தான் விளங்கிக்கொள்ள முடியாதவனாகியிருக்கிறான். அவனப்பா
கொஞசம் சொத்துக்களோடு இவ்வூருக்கு வந்து சேர்ந்த சில மாதங்களுக்குப்பின் வந்து
சேர்ந்திருந்தன இந்த ராட்சச தேக்கு
மரங்கள். ‘வாண்டையார் வீட்டுக்கு மரம் கப்பல்ல வந்துச்சாமே’ என சனங்கள்
பேசிக்கொண்டாலும் உள்ளூற அவ்வளவு பேருக்குமிருந்தது சொல்லமுடியாததொரு ஏக்கம். இந்த
ஊரில்தான் அவரின் திருமணம் நடந்து வாழ்க்கை துவங்கியது. கொரடாச்சேரிக்கும்
திருவையாறுக்குமாய் வியாபாரம் செய்துகொண்டிருந்தவரின் திருமணநாட்கள் துவக்கத்தில் அவ்வளவு
சுவாரஸ்யமில்லை. முழு அணைப்பிற்கே நொறுங்கிவிடும் சிறுபெண்ணாய் அவரின் மனைவி ஒரு
எலிக்குட்டிபோல் அங்குமிங்குமாய் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தாள். தன் உடலை தான்
கொண்டுவந்து சேர்த்திருந்த இரண்டு சிறு நகைப்பெட்டிகளில் ஒன்றைப்போலவே பாதுகாத்தவளின் தோலில் வெளுப்புமில்லாத
கருப்புமில்லாத ஒரு சாம்பல் நிறமிருந்தது பலவருடங்கள் வரையிலும். காமம்
ஊர்ந்தடங்கும் இரவுகளில் வாண்டையாரின் அணைப்பிலிருந்து தப்பியோடுமவள் கால்கள்
கரப்பான்பூச்சிகளின் அசைவுகளென நான்கு சுவற்றிற்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும்.
கரப்பான்பூச்சி முதலில் வெளியறைக்குத் தப்பிச்செல்ல முயன்றது. சில காலங்கள்
அம்முயற்சியில் தோற்றபின் வீட்டிற்குவெளியே தப்பியோட எத்தனித்து தோற்றது. பின்பு
தன்னுடலின் மீதான அசைவுகளை விரும்பத் துவங்கிய தினங்களில் விருப்பத்துடன் மேலேறி
ஊர்ந்த அசையும் உடலை காவிரியின் கரையோரமெங்கும் நீந்தச்செய்து பழக்கி பின்
ஏதாவதொரு கரையில் இறக்கிவிட்டு தப்பிவரும் ஏமாற்றுவித்தை கற்றுக்கொண்டிருந்தது.
வாண்டையார்
அவ்வூருக்கு வந்ததினத்தில் முதலாவதாக உறவுக்கரம் நீட்டியதும் இவர் உறவுகொண்டதும்
காவிரியுடன்தான். பூர்வீகமான ஊரென்கிற விசயம் ஒருபுறமிருப்பினும் உறவுக்காரர்களென
ஒருவரும் அப்போதைக்கு அங்கிருந்திருக்கவில்லை. ரங்கூனின் வீதிகளில் இவன் உறவுகள்
வியாபாரிகளாகவும், கூலிகளாகவும் அனேகமாயிருப்பதும், மலாயிலும் சிங்கப்பூரிலும்
தோட்டங்களிலிருப்பதும் அப்பொழுது நினைக்க விரும்பாததொன்றாக அவருக்குப் பட்டது. இவ்வூரில்
தனக்கென ஒரு இடம் பார்த்து இவர் குடிகொண்டது துவக்கத்தில் ஊருக்கு மையமாக
தாசிகளின் வீதிக்கு அடுத்த வீதியில்தான். புதிதாக ஒருவனை உள்வாங்கியிருந்த ஊரின்
இயக்கத்தில் மாற்றமெதுவுமில்லை. சிலர் விசாரித்து அடையாளங் கண்டுகொண்டபின் கொஞ்சம்
ஆதரவாகவும் அயற்சியாகவுமிருந்தது அவருக்கு. காவிரிக்கு கரை எதுவுமில்லை, இஷ்டப்படி நெளிந்து வளைந்து சென்றுகொண்டிருந்த
அதில் தன்னுடல் கிடத்தின முதல் தினத்திலேயே ஒரு மாபெரும் பெண்ணினுடலில் தான்
படர்ந்திருப்பதாய் உணர தன்னையுமறியுமால் அதனோடு முயங்கத் துவங்கியிருந்தார்.
சிலநிமிடங்களுக்குப்பின் அவனுடலின் சில துளிகள் ஆற்றுநீரின் சுழிப்பில் கலந்து
விரைந்து செல்ல, மெளனமாக அதனைக் கவனித்து எழுந்தார். அன்றிலிருந்து அந்நதியுடன்
தனக்கு மட்டுமேயான பிரத்யேக உறவிருப்பதாகத் தோன்றியவருக்கு காவிரியின் வழியெங்கும்
பயணித்துத் திரும்ப ஆசையிருந்தது. அனந்தன் பிறந்தபிறகு அப்படியானதொரு பயணத்திற்கு
தயாரானவரை ஊரில் சிலர் பஞ்சம் பிழைக்கப் போகிறாரென்றும், ஆண்டியாகப் போகிறாரென்றும்
சொல்லவும், அப்படியானதொரு பயணம் சாத்தியமில்லாததாகவே போனது.
தம் மனைவியின் உடலில் தாவரங்களையும் பாறைகளையும் ஒவ்வொரு
முறையும் உணரமுடிந்த தன்னால் ஒருபோதும்
நீர்மையை உணரமுடிந்த்தில்லை என்பது ஒரிரவில் புரிய அதனை சதை போர்த்தியதொரு
பிண்டமாக மட்டுமே பார்க்க முடிந்தது அவரால். கரப்பான்பூச்சியின் நீந்தும்
விளையாட்டிற்குப் பழகிப்போயிருந்தவள் இவரின் விலகுதலில் அச்சமும் வருத்தமும்
கொண்டவளாய் வெவ்வேறானதாய் தன்னுடலை மாற்றி புதிது புதிதான நாடகங்களை நிகழ்த்திக்
கொண்டிருந்தாள். உழவுமாடுகள் பெருகிய அவ்வூரின் வயல்களில் எப்பொழுதும் சலசலத்துக்
கொண்டிருக்கும் நதிநீரின் பிம்பத்தில் தான் விரும்புகிற ஓராயிரம் பெண்களைத் தேடித்தேடி
வேட்டையாடிக்கொண்டிருந்த வாண்டையாரின் உடலெங்கும் வறண்ட நிலத்தின் திரட்சியப்பி நிற்க,
இன்னும் இன்னுமென அவர் நீரோடு கலப்பது அதிகரித்திருந்தது.
ஊர் எல்லா தினங்களிலும் ஒரேமாதிரியாகயிருந்தது
இங்குமட்டும்தான், சதாவும் பயணிகளாலும் வழிபோக்கர்களாலும் இவ்வூரின் வீதிகளுக்கு
பிரத்யேகமானதொரு முகமில்லாமல் போய் எல்லா ஊரின் முகங்களையும் வாசணைகளையும்
சுமந்துகொண்டு திரிந்தது. தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் இங்கு
மாலைநேர நடனம் காண வருகிறவர்களின் எண்ணிக்கை நிபந்தனைகளின்றியே குறைந்து
போகத்துவங்கியபொழுது இங்கிருந்த தேவதாசிகளும் வெவ்வேறு ஊர்களுக்கு பெயர்ந்து
சென்றனர். ராஜம்மாள் சிறுமியாய் நடனம் கற்றுக்கொண்டிருந்த தினத்தில்
சொல்லிவைத்தாற்போல் தன்னோடிருக்கும் அவ்வளவுபேருக்கும் மிக அழகான கால்கள் என்பதைத்
தெரிந்து கொண்டவளாய் தன்னுடைய கால்களையும் மிக அழகானதொன்றாக்கிக் கொள்ள
விரும்பினாள். உள்ளூர்க்காரர்கள் சிலரைத் தவிர்த்து அதிகம் ஆட்களின் வரத்தில்லாத
தினங்கள் துவங்கியபொழுது அவளின் அம்மா நாகையிலிருந்து சுபத்ராவிற்குக்
கிளம்பிப்போவதாகக் கிளம்பிப் போனாள். தஞ்சையிலிருந்து நாகை செல்லும் ஒரேயொரு
ரயில்வண்டிக்காக இவர்கள் காத்திருந்த தினத்தில் இவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
அம்மா ஒருபோதும் திரும்பப்போகிறாளில்லை எனபது. அம்மா நெடுந்தூரப்பயணம்
போகிறாளென்பது பெருமையாகவும் சந்தோசமாகவுமிருந்தது. தஞ்சையிலிருந்து கிளம்பிய மூன்றாவதுநாள் அவளம்மா
கைகாட்டி வழியனுப்ப ஒருவருமில்லாமலேயே கப்பலேறியிருந்தாள்.
ராஜம்மாளுக்கு உடலில் நீர்
பூத்திருந்தது, சிறுமியாகவுமில்லாமல் குமரியாகவுமில்லாமல் வயதுகளைக் கடந்தவளாய்
தன்னுடலை நெகிழ்ந்து திரியும் படகெனக் கொண்டிருந்தாள். இளநொங்கின்
வாசனையிலிருக்கும் நெடி அவளின் உடல் முழுக்க கொப்பளித்து வழிய பெண்மையின் வசீகரத்
துவாரங்களை தன் நடனத்தால் இன்னும் இன்னுமென அழகூட்டியிருந்தாள். கொரடாச்சேரியிலிருந்து கொஞ்சம் விளைச்சலுக்குத் தேவையான
தான்ய மூட்டைகளை வாங்கித் திரும்பிய தினத்தில் வாண்டையாரின் கவனம் முதல் முறையாக
தாசித்தெருவுக்குத் திரும்பியிருந்தது. காவிரியைப் புணர்ந்து
சலித்திருக்கவில்லையெனினும் நீர்மையை பெண்ணுடலில்
தேடுகிறவராகவே இன்னுமிருந்தவர் தேடிச்சென்றது உடலின் நிர்மையைத்தான். நீரில்
உறங்குவதென்கிற புரிந்து கொள்ளவியலாததொரு சாகசமது. பதினாறு சன்னல்களிருந்த
ராஜம்மாளின் வீட்டில் தாசிகள் ஐவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். நடனம் அவர்களுக்கு
சலித்துவிட்டிருந்தது, நடனம் மட்டுமில்லாமல் வாழ்தலும் புணர்தலும் சலிப்பின்
ஆகக்கடைசியான உச்சத்திலிருக்க, கடந்த காலம் பற்றின நினைவுகளை சிதறடிக்கவே ஒவ்வொரு
முறையும் அவர்கள் விரும்பினர்.
வாண்டையாருக்கு தான் தேடிய நீருடல்
தனக்கு மிக அருகாமையிலேயே இருக்குமென்கிற விசயம் பிடிபட்டபொழுது குமரியென்று சொல்ல
முடியாதவொரு சிறுமியை தன்னுடல் இவ்வளவு சுகிக்குமென அவரால் நம்பியிருக்க
முடியவில்லை. நீர்மையின் ஒளிபெருகிய சிறுமியவள். எல்லா மூர்க்கங்களையும்
சிதறடித்து இவரை அமைதிகொண்ட இரவுகள் அவளுடன் கழிந்தவை. பின்பொருநாள்
மிஞ்சியிருந்த ஐந்துபேரும் தாங்களும் அங்கிருந்து கிளம்பிச் செல்வதாகச் சொல்லிக்
கிளம்பிச்சென்றனர். தஞ்சை நிறைய பேரை திரும்பி வராத பயணத்திற்கு அனுப்பி
வைத்தபடியேயிருக்க, எங்கெங்கிருந்தோ இங்கு வருபவர்களும் திரும்பிச்செல்ல
விரும்பாதவர்களாய் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ராஜம்மாளுக்கு இப்பொழுது பிரிவின்
சுவாரஸ்யம் சகிக்கவியலாததொரு வேதனையென்பது புரிந்திருந்தது, அவ்வேதனையிலிருந்து
யாரும் யாரையும் மீட்டெடுத்துக் கொள்ளவியலாத துரதிர்ஸ்டசாலிகளாகவே இருந்தனர். ரோகிகளும் பிணிகொண்டவர்களும் மிகுந்த ஊராயிருந்தது ஊர், காவிரியின்
கரையோரங்களில் காலராவும் பிளேக்கும் மிகச்சாதரணமாக காணமுடிகிறதொன்றாக
போய்விட்டிருந்தது. இவரும் ராஜம்மாளும் எப்பொழுதும்போல் அந்நதியில் நீந்துவதும்
கூடுவதுமாயிருந்தனர் விருப்பத்துடன்.
வீட்டிற்குப் போவது விரும்பக்கூடியதொன்றாய் இல்லாத பொழுதும்
அனந்தனின் சின்னஞ்சிறு முகத்திற்காகவேனும் போய்வந்து கொண்டிருந்த வாண்டையாரை
மிகச்சில நாட்களிலேயே தன்னுடலோடு கூட அவர் மனைவி வற்புறுத்தியிருக்கவில்லை.
ஆடிஅமாவாசைக்கு ஏடுகள் கொஞ்சத்தோடு வீட்டிற்கு வந்திருந்த தூரத்து உறவினொருவன்
அடுத்த இரண்டு ஆடிஅமாவாசைகளுக்குப் பின்பும்கூட அங்கிருந்து போயிருக்கவில்லை.
ரோகத்திற்கு மருந்திருக்கிறதென தான் வைத்திருக்கும் ஏடுகளை கவனமாகப் பாதுகாத்தவன்
அவ்வூரின் முதிய வியாதியஸ்தர்களுக்கு வைத்தியராயிருந்தான். அதிகமான நேரமும் அவன்
வீட்டிலேயே இருந்ததில் அனந்தன் அவனையே தகப்பனென நினைத்துக் கொண்டிருந்தான். அவனும்
வாண்டையாரும் ஒரே சமயத்தில் இருக்கிற பொழுது யாரை அய்யாவென கூப்பிடுகிற
சந்தேகமில்லாமலில்லை. வைத்திய சாச்திரத்தில் தன் சூட்சுமம் குறித்து இவ்வூர்
புரிந்துகொள்கிற நாளில் தான் இந்த தஞ்சை வட்டத்திலேயே மிகமுக்கியமானவன் என்பதை
உலகறியும் என நினைத்துக்கொள்வான். அனந்தன் வளர்ந்து சில வருடங்களிலேயே மதராஸ்
அனுப்பப்பட அதன்பிறகு அவ்வீடு வெறுமையாகிப் போயிருந்தது. வாண்டையார் வீட்டிற்கு
வருவதை எப்போதைக்குமாக நிறுத்திவிட, வைத்தியனைத்தான் தன் கனவனென ஊருக்குள் அவரின்
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஊரில் எல்லா வீதிகளும் அந்நியர்களால்
நிரம்பிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் விவாசயம் வீழ்வதும் செழிப்பதுமாயிருக்க
ரயிலேறி கப்பலுக்குப் போகிறவர்களின் எண்ணிக்கை அப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய்க்
குறையத் துவங்கியது. வாண்டையார் ராஜம்மாளோடு ரங்கூனுக்குத் திரும்பிவிட
நினைத்திருந்தார். யாருக்குத் தெரியும் இவள் கைகாட்டி வழியனுப்பிய நிறையபேர்
ரங்கூன் வீதிகளில் தாசிகளாகவோ, கூலிக்கு வேலை செய்கிற பெண்களாகவோ
சுற்றிக்கொண்டிருக்கலாம். அவருடனிருக்க விரும்பியவளுக்கு அவ்வூரைவிட்டு எங்கும்
போகிற எண்ணமில்லை, காவிரியில் விழித்து காவிரியில் உறங்குவதை விடவும் மேலானதொரு
வாழ்க்கை எதுவுமில்லையென்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாள், இரவில் அந்நதிக்கு
யாரும் உணரமுடியாத்தொரு நிறமிருக்கிறது, நீலம், கருப்பு என எப்படி வேண்டுமானாலும்
நினைக்கத் தோன்றும் அந்நிறத்தின் உடல் இசையாலும் மொழியாலுமானது. ஒரு நதியின்
உடலைப் புரிந்து கொள்ள, அதன் மொழியைப் புரிந்து கொள்ள அந்நதியுடன் அந்தரங்கமாக
உரையாடப் பயிலவேண்டும். அவள் அந்நதியுடன் உறவாடியுதடன் தன் நடனத்தின் பெரும்
சாகசங்களை அதன் முன்னால்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள் இப்பொழுது.
சுழித்தோடுமதன் சலசலப்பில் புரிந்துகொள்ள முடிகிற வார்த்தைகளில் தாபத்தின்
மூர்க்கமும், வேகமுமிருக்கும். அப்படியானதொரு மூர்க்கத்தினைதான் அவளுடல்
விரும்பியிருந்தது. அவளுடல் நீலம் பாரிக்கத் துவங்கியது, நஞ்சல்லாத நீலம். நடனமும்
நீர்மையும் சேர்ந்தளித்த நிறம், பேரொளியின் பிரதிபலிப்பாய் அங்கத்திற்குள்
சேகாரமாகியிருக்க அவள் எருக்கம்பூவின் இதழ்களென பூத்திருந்தாள் என்றெறைக்குமாய்.
ஒரு மார்கழி மாதத்தின் அதிகாலையில் புதிதாக ஆற்றின்
குறுக்காக போடப்பட்டிருந்த பாலத்திற்குக் கீழாக தடித்த மனிதன் இறந்துகிடப்பதனைக்
கண்டு ஆட்கள் சிலர் தூக்கி வந்து போட்டனர். சில நிமிடங்களிலேயே விசயம் தாசி
தெருவிற்கும் மொத்தமிருந்த முப்பத்துமூன்று வீதிகளுக்குமாய் சென்றுவிட்டிருந்தது.
ரங்கூன்காரரு செத்துப்போனாராமே என ஊருக்குள் பெரிய அனுதாபங்கள் எதுவுமின்றி
சிறியதொரு தகவலாக மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தனர். வாண்டையாரின் இறந்த உடலைச்
சுற்றி அழுத பெண்கள் யாருக்கும் அவரைப்பற்றின அதிகப்படியான தகவல்களெதுவும்
தெரிந்திருக்கவில்லை. அவரின் மனைவி எவ்வளவு முயன்றும் அழமுடியாதவளாய்
எப்பொழுதும்போலவே இருந்தாள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெருக்கமாக அவரைக் கவனித்த
அனந்தனுக்கு மட்டும் கொஞ்சம் அழவேண்டுமென்கிற உணர்வு எழுந்திருந்த பொழுதும்
அப்படியானதொரு முயற்சியை அவன் செய்திருக்கவில்லை. அப்பாவின் முகமென்று ஒன்று இப்பொழுது அவனுக்குள் இழையோடத்
துவங்கவும் கனத்துக் கிடக்கும் அவருடலின் நீர்மை புரிந்து கொள்ளமுடியாததொன்றாக
இருந்தது. முரட்டுத்தோலாலான அவரின் தோல்கள் இப்பொழுது பெண்மை கசிந்தபடியிருக்க
நீண்ட நேரமாய் அவரின் முகத்தினைப் பார்த்தபடியே இருந்தான்.
ராஜம்மாளின் வீடு களையிழந்து போயிருந்தது, அவள் ஆண்கள்
ஒருவரையும் சமீபமாய் அனுமதித்திருக்காததோடு வந்துகொண்டிருந்த ஒரேயொருவனும்
இப்பொழுது இறந்து போய்விட்டிருக்கிறான் என்பதில் சிதைந்து போயிருந்தாள்.
அவளுடலிலிருந்து நீர் கசிந்தது. வெறுமனே வியர்வையெனவும் கண்ணீரெனவும் பிரித்துப்
பார்க்கமுடியாதபடி பல வருடகாலம் நிரம்பியிருந்த குளமொன்று நிரம்பி
வழிவதைப்போலிருந்தது. வாண்டையாரின் உடல் தகனத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுக்கொண்டிருந்த அம்மாலையில் வீதியின் ஒரு கோடியில் நின்று பார்த்துக்
கொண்டிருந்தவளை மொத்த சனமும் சில நொடிகள் திரும்பிப் பார்ப்பதும் அவள் பெயரை
உச்சரிப்பதுமாயிருக்க வாண்டையாரின் மனைவி வைத்தியனிடம் சொல்லி இவளையும்
கூட்டிவரச்சொல்லி அனுப்பினாள். அனந்தன் இந்தப் புதியவளின் உடலுக்கும் தன்
தந்தையின் உடலுக்கும் மிக நெருக்கமானதொரு உறவிருந்ததை கவனித்தபடியே
அவளுடலிலிருந்து நீர் கசிவதைக் கவனித்து பார்வை திருப்பாமல் பார்த்துக்
கொண்டிருந்தான். இவளும் அவனைக் கவனித்தபடியே நீண்டதூரம் கூட்டத்துடன்
செல்லப்பிடிக்காமல் வழியிலேயே நின்றுகொண்டாள்.
காவிரியில் நீர்ப்பெருக்கெடுக்கும் மாதத்தின் பிற்பகுதி
நாட்களில் பெய்யும் பெருமழை தினமொன்றில் இன்னும் தன்னுடலிலிருந்து நீர்க்கசிவு
குறைந்திருக்காததில் கவனங்கொண்டவளாய் தஞ்சாவூருக்கு வைத்தியர் யாரையாவது பார்க்கலாமெனக்
கிழம்பினாள். முத்துக்கிழவனின் வண்டியில் தனியாளாக அவள் சென்றுகொண்டிருப்பதை கவனித்த
அனந்தன் அவளழைக்காமலேயே துணைக்குக் கிளம்பினான். இவளுடலில் நீர்மையின் பெருக்கு
மிகுந்திருக்கிற நாட்களிது. என்ன செய்தினும் சிலநாட்கள் இதனை நிறுத்தவியலாதென
வைத்தியர் சொல்லி கருந்தேனும், சுக்குநீரும் அடிக்கடி குடிக்கும்படி
சொல்லியனுப்பியிருந்தார். திரும்பி வரும் வழியெங்கும் அவள் பேசப்போகிற நொடியொன்றிற்காக
காத்திருந்தவனாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளுடலின் வாசணை
புதிரானதொன்றாயிருந்தது. என்ன சொல்லிக்கூப்பிடுவதென்கிற குழப்பத்தில் அலைபாய்ந்த
அவன் பார்வையக் கவனித்தவளாய் ‘ராசம்மானு கூப்பிடு’ என்றாள். முதுமையின்
முதல் சில தப்படிகளில் நின்றிருந்தவளை பெயர் சொல்லிக்கூப்பிடுவது உகந்ததொன்றல்ல
என்கிற தயக்கத்துடன் மெளனித்திருந்தவனிடம் தனக்கு இன்னும் அப்படியொன்றும் முதுமை
எய்தவில்லை என்றாள்.
இன்னொருமுறை தான் நடனமாடக்கூடுமென சில தினங்களுக்கு முன்பு அவளால்
யோசித்திருக்க முடியாது, தன்னுடலின் பிடிபடாத கோணங்களுக்குள் இன்னொருவனும் பயணிக்க
விரும்புவான் என்பது இப்பொழுது துயரமிக்கதொரு விசித்திரம்தான். அவள் முதுமையின்
எந்த சுவடையும் பெற்றிருக்கவில்லை என்பதை அவள் கால்களும் கண்களும் சொல்லின. ஒற்றை
விரலின் நுனியில் மொத்த உடலையும்
சுழற்றித் திருப்புமவள் ஒரே சமயத்தில் பூதகியாகவும், கொற்றவையாகவுமிருந்தாள்.
கொற்றவையின் நடனமிது. காவிரி எழுந்து தன்னுடலை சுழற்றுவது போலிருந்தது அக்கனம். அவளை
வந்தடைவதற்கானதொரு பயணமாகவே தன் தந்தையின் மரணமிருந்திருக்கக்கூடும் அம்மனிதன்
விட்டுச் சென்ற உச்சபட்சமான சொத்தொன்றை ஒருபோதும் தனதாக்கிக் கொள்ள
விரும்பியிருக்காவிடினும் வேறு எவரும் உடமையாக்கி
கொள்ளக்கூடாதென நினைத்துக் கொண்டான். தயக்கமின்றி அவளை தன்னிடம்
அனுமதித்தவள் இவனுக்குள் தன் நீர்மையின் தடயங்களை பரப்ப விரும்பியிருக்கவில்லை.
4
நடனமாடுகிற கனங்கள் தோறும் உடலின் கதவுகள் திறந்து
வெறிகொண்டலைவதை என்னசெய்தும் நிறுத்தமுடியாதுதான், அவளோடு சுகிக்க யாரால்
முடியும்? பெருங்காமத்தின் கோட்டுச்சித்திரமாய் ஒவ்வொரு முறையும் அவ்வீட்டின்
சுவர்கள் அவளைக் கவனித்திருந்தன. அனந்தன் எதுவொன்றாகவும் ஆகமுடியாத ஒருவனாகவே
தாசித் தெருவுக்கும் வீட்டிற்குமாய் சுற்றிக்கொண்டிருக்க, வைத்திய அப்பா அவன்மீதான
பெருங் கரிசனத்தில் கொரடாச்சேரிக்கு அனுப்பி வைத்தார். பயணம் எளிதாகிக்
கொண்டிருந்த நாட்களவை. அப்பாவின் வியாபாரத்தைப் பார்க்க வேண்டி அங்கு சென்றவனுக்கு
அவ்வூர் சகிக்கவியலாததொன்றாகவே இருந்தது. இழைக்கட்டுகளும்
வெற்றிலை பொதிகளுமாய் அதிகாலைகளில் அந்த ரயில்நிலையத்திலிருந்து வந்து போகும்
ஒரேயொரு ரயிலில் கும்பகோணத்திற்கும், தஞ்சாவூருக்கும் பொதிகளை அனுப்பி வைப்பதோடு
அன்றாட பணி முடிந்து பகல் முழுக்க வீதிகளில்
சுற்றிக்கொண்டிருப்பதை அவன்
விரும்பியிருக்கவில்லை. இங்கும் காவிரியின் ஒரு துண்டு உடல் நீந்திக்கொண்டிருந்ததுதான். அதில் ராஜம்மாளைக் காணமுடியாததுதான் ஏக்கமாயிருந்தது. வெற்றிலையின்
தோற்றத்திற்கும் அவளுடலுக்கும் நெருக்கமானதொரு ஒற்றுமையிருப்பதை ஒவ்வொரு முறையும்
இலை கிள்ளுகையில் யோசிப்பான், அதனை வருடிக் கொடிக்கிற நொடியில் கசியும் வாசனையும்
ராஜம்மாவின் உடல் வாசணையும் ஒன்றேதான். அந்த வாசணைக்காகவே வெற்றிலை மெள்ளப்
பழகிப்போயிருந்தான்.
கடல்கன்னியொருத்தி கனவில் வந்து ஸ்கலிதம் கண்ட தினத்தில் இரவு
முழுக்க உறக்கம் மீளப்பெறாதவனாய் சாளரத்தின் வழி நெளிவான அச்சிறு நதியைப்
பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் அதிகாலையில் வெற்றிலை கட்டுகளுக்குப்
பதிலாக இவனே தஞ்சாவூருக்கு வண்டியேறினான். இன்னும் விடிந்திருக்காத அதிகாலையில்
எவ்விதமுமான முன்னறிவுப்புகலுமின்றி ஊருக்குக் கிளம்பியவனிடம் தொண்டை வரையிலுமான
சில சொற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன அவளிடம் கேட்க வேண்டி. சில மாதங்களில்
தாசித்தெரு பெரிய மாற்றமொன்றையும் சந்தித்திருக்கவில்லை. உடைக்கப்பட்டு சுடுநீரில்
கலக்கப்படும் அதிகாலை காப்பிக் கொட்டையின் மணம் வீதி முழுக்க நிரம்பிக் கிடக்க,
ராஜம்மாளின் உறக்கம் நிரம்பிய முகமொன்றை பார்க்க விழைந்தவனாய் அவள் வீட்டிற்குச்
சென்றிருந்தான். பூட்டப்பட்ட கதவுகளை கண்டதும் தயக்கத்தோடு நின்றவன் யாரிடம்
கேட்பதெனத் தெரியாமல் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தான், ஒருவரும் இவனுக்குப்
பதில் சொல்கிறவர்களாயில்லை. இவனைக் கடந்துபோன ஒரு நடுத்தரவயதுப்பெண் மட்டும் ‘
ரொம்ப வருசம் இவங்கய்யா இந்த வீடே கெதின்னு கெடந்தாரு...இப்போ இவன்...இன்னும்
எத்தன குடி கெடப்போவுது?...’ யாருக்கோ சொல்லிச் சென்றாள்.
பூச்சியரித்து இற்றுப்போன கதவையொட்டியே வாசலில் உட்கார்ந்தவன் அந்த வீதியின்
முதுமையில் இப்பொழுது காமம் முற்றியொதொரு பேயாய் அலைந்து கொண்டிருப்பதைக்
கவனித்தான். நூற்றாண்டுகளாய் வேட்டையாடப்பட்ட பேயது, முதுமையில் வெறிகொண்டு
வேட்டையாடக் காத்திருக்கிறது, இப்பொழுது வேட்டைக்கென எதுவுமில்லாமல் வறண்டு
போயிருக்கும் அவ்வீதியில் மிகுந்திருந்தனைத்தும் சூன்யமே.
வெயிலின் வெளிச்சம் கொஞ்சமாய் நிறமாறத் துவங்கிய நேரமாய் ஈர
உடலுடன் அவள் வீட்டிற்குத் திரும்பியிருந்தாள். உடல் கசக்கியெறியப்பட்டதொரு
வெற்றிலையைப்போல் சுருங்கிக் கிடக்க அந்தக் கண்களில் மட்டும் பெரும் வெளிச்சமொன்று
ஒளிர்ந்து கொண்டிருந்தது. தான் கனவில் கண்டது இதே கண்களைத்தான் என நினைத்துக்
கொண்டவன் இத்தனை நாட்களுக்குப் பிறகு பூர்ணமானதொரு புன்னகையை சந்திக்க முடிந்த
திருப்தியில் பதிலுக்குப் புன்னகைத்தான். இருவருமாக வீட்டிற்குள் நுழைந்த சில
நிமிடங்களுக்குப்பின் இந்த அதிகாலை இவன் வரவை எதிர்பார்தத்தாகக் கூறினாள். முந்தைய
இரவு நதியுடன் பேசிக்கொண்டிருக்கையில் முதலும் கடைசியுமாய் அனுப்பிய அந்தரங்கச்
செய்தி உனக்கானது மட்டும்தான், எப்படியும் கிடைக்கப்பெற்றிருப்பாய் என்றாள். தன்
கனவு குறித்து அவளிடம் சொல்லியவனை ஈர உடலோடு அணைத்துக் கொண்டாள். உடல் முழுக்க
தாய்மையின் சூடு, இரவில் நடனமாடியிருக்க வேண்டும், அல்லது ஒட்டுமொத்தமான இரவும்
அவளோடு சேர்ந்து ஆடியிருக்க வேண்டும், அப்படியானதொரு சூடு அவளுடலில். இவனுக்குத்
தூதனுப்பியதற்கான காரணம் எதுவுமில்லையென சொன்னவள் ஒருமுறை அவனை ரங்கூன் போய்வரச்
சொன்னாள். மலர்ந்து உள்ளங்கையினை கையிலெடுத்துக் கொண்டவனிடம் நத்தைகளின் ஊரலும்,
மீன்களின் குறுகுறுப்புமிருந்தது. தன் கைகளில் சின்னஞ் சிறியதாய் ஏராளமான மீன்களை
நீந்த விட்டிருந்தவளின் மேனியின் நீர்மை குறித்த பிரம்மாண்டம் எழுந்த பொழுது அவளுடலில்
நீந்தும் மீன்களிலொன்றாகிவிட விரும்பினான். அவன் கண்களின் வேகமான இயக்கத்தில்
கவனித்தவளாய் ‘நீ மீனாக விரும்பாதே அனந்தா...’ அவள் குரல் நீந்தும்
தன் விருப்பங்களை அறுத்து நிறுத்தியிருந்தது. அவன் ரங்கூன் போகவேண்டியது
தனிப்பட்டதான விருப்பமில்லை வாழ்வின் இறுதியில் அவன் தந்தை அவனுக்கு விட்டுச்சென்ற
செய்தியென்றாள். தன்னால் உரிமை கொண்டாடமுடியாததொரு மனிதனாகவே இப்பொழுதும்
நினைக்கத் தோன்றுகிற ஒருவனின் கடைசி செய்தி எது குறித்தானதென்கிற யோசனைகளுடன் இவன்
பயணத்திற்கு ஒப்புக்கொண்டான்.
ரங்கூன் இன்னுமொரு பதினைந்து வருடங்களை விழுங்குமென இங்கிருந்து
கிளம்புகையில் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த முந்நூறு பெரு மரங்கள் இவன்
வருகைக்கென காத்திருந்தன, உடன் அவற்றிற்கிடையே ஓடிக்கொண்டிருந்த மிகப்பழையதொரு
நதி. அந்த நதி எப்பொழுதும் அவனை திருவையாற்றிலிருந்து பிரித்திருக்கவில்லை. இதன்
நிறம் வேறாக இருப்பினும் அதன் மொழியை இவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வா.னா.உ.னா
தம்புச் செட்டியின் வட்டிகடையோடு அவ்வாண்டுகள் கழிந்த பொழுதும் ராஜம்மாளின்
கால்களின் வனப்பும் சுழன்றாடுகையில் அவளிடம் வெளிப்படும் வசீகரமும் பல்லாயிரம்
மைல்களுக்கப்பாலும் இவனை சிதறடித்தது. கொஞ்சம் முதுமையும் பணமும் சேர்த்துக்
கொண்டு ஊர்திரும்பிய நாளில் இவனோடு வருவதற்கு குடும்பமென ஒரு ஒரு பெண் இரண்டு குழந்தைகளிருந்தனர். எப்பொழுதோ
தொடர்பறுந்துபோன அம்மா இப்பொழுது நினைவுக்கு வரத்தான் செய்தாள். உடலும் மனமும்
கனக்க இவன் தஞ்சைக்கு திரும்பின நாள் இன்னொரு வாண்டையாரை ஆர்வமின்றி உர்
ஏற்றுக்கொண்டது. ஊரின் விஸ்தாரம் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடைவெளியைக்
குறைத்திருக்க நிறைய பேர் ஆற்றையொட்டி வீடுகட்டியிருந்தனர். எப்பொழுதும்போல்
பெருஞ்சிரிப்புடன் காவிரி நடனமாடிக்கொண்டிருந்தாள்.
ஊருக்கு வந்த சில தினங்களுக்குப் பிறகு தாசிவீதிப் பக்கமாக
செல்கையில் அதன் முகம் முழுமையாய் மாறிப்போயிருந்தது. தான் அந்தரங்கமாய் நேசித்த
வீட்டின் துருப்பிடித்த கதவுகள் இன்னும் முதுமை எய்திருக்க, அவள் அவ்வூரின் மொத்த
முதுமையையும் தன்னுடலில் பெற்றிருந்தாள். இவனைக் கண்டதில் களிப்புற்றவள்
‘இந்தமுறையும் உனக்கு நான் அனுப்பிய செய்தி வந்து சேர்ந்திருக்கிறதென்றாள்’ சிரித்துக்கொண்டே இவன், அப்படியான செய்திகள் உன்னிடமிருந்து வருடங்களாகவே
வருகிறதுதான்’ என்றான். அவனுக்காக ஒருமுறை நடனமாடட்டுமா என்கிற அவளின்
விருப்பம் இவனால் மறுக்கமுடியாததாகவும் வினோதமானதொரு மகிழ்ச்சியாகவும் பொங்கியது.
எழுந்து நடக்க சிரமப்படுகிற ஒருவளால் எப்படி நடனமாட முடியுமென்கிற அவன் எண்ணம்
அவள் படுத்தபடி இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்திய முதல் நொடியிலேயே
நொறுங்கிப்போனது. அவளுடல் நடனத்தாலும் நீர்மையாலும் ஆகியிருக்குமொன்று, நீர்மைக்கு
ஏது தளர்ச்சி? அவள் நெகிழ்ந்துகொண்டிருந்தாள். அவள் நடனத்தில் அசைவுகள்
ஒவ்வொன்றிலும் இவனுடலின் இயக்கம் சிறைபடத் துவங்கியது. எவ்வளவு தூரத்திலிருந்தும்
எதிர்கொள்ளவியலாததொரு நெருப்புப்
பிளம்பாய் ஒளிர்ந்த அவளின் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் பொசுங்கிக்
கொண்டிருந்தான். உடலில் வியர்வை சொட்ட சில நிமிடங்களுக்குப்பின் அவள் களைத்து
ஒதுங்கிய பொழுது அவளை எதிர்கொள்ளமுடியாதவனாய் எழுந்து ஓடினான். யாரோவொருவன்
பித்துப்பிடித்ததைப் போல் ஓடுவதை அந்தவீதியிலிருந்த ஒருவரும் அன்று
கவனித்திருக்கவில்லை.
அவளுடல் எரிக்கப்பட்டு சாம்பல் காவிரியில் கரைக்கப்பட்ட
மாலையில் அந்நதி நீலநிறமாகியிருந்ததை இவன் மட்டுமே கவனித்திருந்தான். தொடர்ந்து
சில தினங்களாய் தன் கனவில் இவ்வூர் ஆற்றோடு போவதைக் கண்டவன் அது இவ்விரவில்தான் என
இடைவிடாமல் பிதற்றினான். ஆற்றில் நீர்ப்பெருக்கு கொண்ட்தாய்ச் சொல்லி கரையோர
குடிசை மக்கள் வெவ்வேறு இடங்களை நோக்கி பயணித்தபடியிருக்க ஊருக்குள்ளிருந்தவர்கள்
எப்பொழுதும்போலவே தங்களின் வீடுகளுக்குள் ஓய்வெடுத்தனர். பெரும் அதிர்வுடன்
பொங்கிய நதி ஊரின் வீதிகளுக்குள் தவழ்ந்து வரத்துவங்கிய நள்ளிரவில்தான்
ஒவ்வொருவருக்கும் தங்களின் இருப்பு குறித்தான் அச்சமெழுந்தது. அப்பொழுதும் தன்
வீட்டிலிருந்து நதியைப் பார்த்துக் கொண்டேயிருந்தவன் பொங்கியெழுமதன் சுழிப்பில் மொத்த
நதியும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். கண்களை நிறைக்கும் நெருப்பின் வெளிச்சத்தோடு
‘நதி எறிகிறதென’ சொன்னவனின் குரலுக்கு பதில் சொல்ல ஒருவருமில்லை
அங்கு...
Comments
Post a Comment