வெயிலுக்கு சுமதி என்று பெயர்.


                
     
கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்  கேட்க நேர்ந்துவிட்ட துரதிர்ஷ்டவசத்துக்காய் ஒருமுறை மன்னிப்பைக் கோருகிறேன். அடிப்படையில் நானொரு புனைவெழுத்தாளன். எல்லாவற்றையும் கதைகளாகப் பார்க்கப் பழகியவன். கேட்கிற பேசுகிற எல்லாவற்றிலும் கதைகளின் கிளைகளைத் தொடர்ந்து செல்லவே விரும்புகிற எளிய மனிதன். இன்னொரு வகையில் சொல்லப் போனால் கவிதைகள் எழுத முயன்று தோற்றுப் போனவன். ஆனாலும் எல்லாக் காலத்திலும் கவிதைகளின் மீதான காதலுண்டு. கவிதைகளின் வழியாகத்தான் எனது கதைகளுக்கான மொழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். சொற்களை இரவல் வாங்குகிறேன். ஏனெனில் கவிதை எப்பொழுதும் ஒரு மொழியை வழிநடத்திச் செல்லும் மகத்தான வடிவமாய் இருக்கிறது. கவிதைகளின் குறைபாடுகள் சார்ந்து பல சமயங்களில் நான் கடுமையாக பேசுவதும் அப்படி பேசுவதற்காக உதை வாங்க நேர்வதும் கவிதைகளின் மீதான ப்ரியங்களால் தான்.
போகட்டும். நான் வெக்கையின் நறுமணம் மிக்க கவிதைகள் குறித்து உங்களுடன் சில நிமிடங்கள் பேசிவிடுகிறேன். இந்த வெக்கை எனக்குப் புதிதானதல்ல. மல்லாங்கிணறின் பொட்டலும் உடலை எரிக்கும் வெயிலும் எனக்குப் பழகியவை. பால்ய காலத்தில் விடுமுறை நாட்கள் அவ்வளவும் பெரியம்மாவின் ஊரான பேராலியில் தான். பேராலிக்கும் மல்லாங்கிணறுக்கும் எட்டு மைல். சைக்கிளில் கிரிக்கெட் விளையாட கூட்டமாக செல்வதுதான் அன்றாட பொழுதுபோக்கு. இரண்டு நாட்களிலேயே உடல் முழுக்க வெக்கையில் தோல் உரியும். கருத்துப் போய் உதடு வறண்டு சதாவும் தாகம் நா வறளச் செய்யும். ஆனாலும் அந்த கோடை நாட்கள் தந்த சந்தோசங்கள் பிறிதெப்போதும் கிடைக்காதது. வெயில் வெறும் அவஸ்தையாக அல்லாமல் உணர்வாகவே மாறியிருக்கிறது. மதுரை விருதுநகர் சிவகாசிக்காரர்களுக்குத் தெரிந்த வெயிலும் வெயில் கால நாட்களும் வினோதமானவை. அதைவிடவும் உக்கிரமான வெயில் பிற ஊர்களில் இருந்திருக்கலாம். அனுபப்பூர்வமாக இன்னும் சிறப்பான தருணங்களை இன்னொரு ஊர்க்காரர் சொல்லிவிடவும் கூடும். ஆனாலும் மதுரைக்காரர்களுக்கு எல்லாமே மதுரைதான். எங்களுக்கு எல்லாமே எங்களின் ஊர்தான். நிலமும் நாங்களும் வேறு வேறல்ல… கோடையில்  கடைசி பருத்தியெடுக்கும் நேரத்தில் களவு பயம் காரணமாக மொத்த ஊரும் கரிசக்காட்டில் போர்வை விரித்து நட்சத்திரங்களின் சாட்சியாய் கதை பேசிய அனுபவம் இருக்கிறவர்களுக்கு தமிழச்சியின் கவிதைகள் வெறும் கவிதைகளாக மட்டுமே இருப்பதில்லை.
“திண்பதற்கு என்ன வாங்கி வந்தாய்
என்று ஓடிவரும் குழந்தைகளிடம்
எப்படிக் கொடுப்பது
சில்லுக்கருப்பட்டியில் உருகியோடும் வெயிலை….”
என மஞ்சணத்தித் தொகுப்பில் ஒரு கவிதை வரும். வெயிலை வேறு எந்த ஊர்காரர்களாவது இப்படி பார்த்திருப்பார்களா? சாத்தியமில்லை. ஏனெனில் சில்லுக்கருப்பட்டியில் வழியும் வெயிலை திண்பது கரிசல் நிலத்திற்கு மட்டுமே சாத்தியம். நிலத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முடியாதவர்களின் பாடல்களாகத்தான் தமிழச்சியின் பெரும்பாலான கவிதைகள் வெளிப்படுகின்றன. கலைஞனுக்கு நிலம் தான் ஆதாரம், வலு, அடையாளம் எல்லாம். நிலத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளும் ஒருவனுக்கு தான் யாருக்காக சிந்திக்கிறோம் செயல்படுகிறோமென்கிற குழப்பம் ஒரு எல்லைக்கு மேல் வருவதைத் தவிர்க்க முடியாது. நிலமென்பது அந்நிலத்தோடு சேர்ந்த மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் உள்ளடக்கிய கலைவையே.
தமிழில் இத்தனை கவிதைகள் எழுதப்படுவதை ஒரே சமயத்தில் சந்தோசமாகவும் சற்று அச்சத்துடனுமே எதிர்கொள்கிறேன். பாதிக்கும் மேலான கவிதைகள் எழுதப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே மறக்கப்பட்டுவிடுகின்றன. எனில் அதற்காக செலவழிக்கப்பட்ட உழைப்பு? இன்னொரு புறம் மலையென குவிந்து கிடக்கும் இத்தனை கவிஞர்களில் சமயங்களில் சில நல்ல கவிஞர்களைத் தவறவிடக் கூடிய துரதிர்ஷ்டமும் நிகழ்ந்துவிடுகிறது. இத்தனை குழப்பமிக்க சூழலில் நல்ல கவிதைகளை இனங்கண்டு வாசிக்க முடிகிற போது கிடைக்கும் நிம்மதியும் உற்சாகமும் அலாதியானது.
சிக்கலான மொழியில் எழுதப்படும் கவிதைகள் மட்டுமே தொடர்ந்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழலில் எளிமையான சொற்களில் முக்கியமாய் பிரதேச அடையாளங்களை வலிமையாகப் பேசும் கவிதைகளின் மீது ஒருவிதமான வெறுப்பு தமிழ் சூழலில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கலையில் பிரதேசத் தன்மையை வெளிப்படுத்துவது குறித்து உரையாடும் போதெல்லாம் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவேன். என் ஆதர்ஷ எழுத்தாளன் என் தகப்பன் கூகி வா தியோங்கோ உலகமே கொண்டாடும் ஒரு சூழலில் இனி என் தாய்மொழியில் மட்டுமே  எழுதுவேன் என அறிவித்தார். கூகியின் படைப்புகள் முழுக்க முழுக்க அவர் மக்களையே பேசுகிறது. Between the river, weep not child, சிலுவையில் தொங்கும் சாத்தான், இரத்தப் பூ இதழ்களென அவரின் கதைகள் எளிதில் மொழிபெயர்க்க சாத்தியமில்லாதவை. ஏனெனில் கிக்கியூ இனமக்களின் கலாச்சாரத்தில் முழுமையாக ஊறிப்போனவை அவரின் கதையுலகம். தமிழச்சியின் கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வரலாமென முன்பு விரும்பி அதற்காக சிறிது வேலை பார்த்தேன். மொத்த கவிதைகளை ஒரே சமயத்தில் வாசிக்கிற பொழுது இந்தக் கவிதைகளை அத்தனை எளிதில் பிற மொழிகளில் மொழிபெயர்த்துவிட முடியாதெனத் தோன்றியது. தனது மக்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் ஒரு படைப்பு அப்படி இருப்பதுதான் அதற்கான மரியாதையும் கூட.
செல் சிறுமீர்காள், மென்பொருள் மின்பாவாய், அதிகாலை நடைவண்டியும் சிட்டிகை காதலும், அவளுக்கு வெயில் என்று பெயர், ஒரு கம்பளிப் பூச்சியும் பட்டாம் பூச்சிகளும், காலத்துரு, மனதளவே ஆகும் மழை, அன்புலப் பெயல், அப்பா முதல் அப்பா வரை, என ஒன்பது பகுதிகளாக ஒன்பது வெவ்வேறு உலகங்களுக்குள் பயணிக்கின்றன இந்தத் தொகுப்பின் கவிதைகள். சொல்லப் போனால் இதில் இரண்டு தலைமுறைக்கான இணைவைப் பார்க்க முடிகிறது. தன்னிலையில் விரியும் கவிதைகளுக்குள் சமகாலத்தின் சிக்கல் மிக்க பகுதிகள் அவஸ்தைகள் ஒரு புறமும் இன்னொரு புறத்தில் முந்தைய தலைமுறை பெண்ணொருத்தி இந்த தலைமுறையை எப்படிப் பார்க்கிறாளென்பதும் நுட்பமாக விரவிக் கிடக்கின்றன. தமிழில் சமகாலக் கவிதைகள் பெரும்பாலும்  பழகிப் போன சொற்களுடனும் பழகிப் போன உலகையே திரும்ப எழுதுவதான ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சரிபாதி நிதர்சனமும் கூட. வாசித்த கவிதைகளிலிருந்து உருவாக்கப்படும் கவிதைகளாக பெரும்பாலானவர்களின் கவிதைகளை வாசிக்க நேர்கிற போது அவர்களுக்கென தனித்ததொரு உலகம் இல்லையோவென சந்தேகமாக இருக்கும். அல்லது அவர்கள் தன்னைத் தவிர வேறு எவரையும் கவனிக்காது போய்விடுகிறார்களா? ஃபெர்டோல்ட் ப்ரெக்டின் கவிதையொன்றில் இப்படி வருகிறது
“அவர்கள் என்னிடம் சொல்கின்றனர்; சாப்பிடு, குடி, உன்னால்
முடியும்படி சந்தோசப்படு
ஆனால் நானெப்படி உண்ணவும் குடிக்கவும் முடியும்?
பசியார்ந்த மனிதனிடமிருந்து நான் ரொட்டியைப்
பிடுங்கிக் கொள்ளும் போது
என் தண்ணீர்க் குவளை தாகத்தால் சாகுமொருவனுக்கு
இல்லாதாக்கும் போது.
என்றாலும் நான் உண்கிறேன், குடிக்கிறேன்.
தனது பசியைக் குறித்து நேர்மையாக ஒப்புக்கொள்ளும் அவருக்கு தன்னை விடவும் பிறரின் பசி குறித்த அக்கறையும் அதற்கான தீர்வு அரசியல்வயமானது என்பதையும் தெளிவாக பேச முடிந்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு அடிப்படையிலிருக்க வேண்டியது இந்த நேர்மையும் அக்கறையுமின்றி வேறென்ன? தமிழச்சியின் அறங் கூற்றாகும் என்னும் கவிதையை வாசிக்கிற பொழுது அது முதல் சில வரிகளில் அதிர்ந்தெழாத ஒரு ஒப்பாரியின் சாயலோடு துவங்குகிறது. எந்த நேரத்திலும் நம்மை சிதறடிக்கக் கூடுமென அச்சம் கொள்ளும் போதே அந்தக் குரலில் உக்ரமேறி
“ரெண்டு மக்க பெத்தெடுத்த
என் நெறஞ்ச வயிறெரிஞ்சு
பால் சொரந்து ஓய்ஞ்ச இப்
பாவி மக முலை
ஒன்னத் திருகி எறிவேன்
நின்னு கொல்லட்டும் அது
நீலியின் வெஞ்சினமாய் !
இந்த ரெளத்ரம் எத்தனை அசலானதோ அத்தனை அசலானது பிற கவிதைகளில் வெளிப்படும் தாய்மையும், நேசமும். இதையெல்லாம் எழுதத் தேவையில்லை அல்லது ஏனெழுத வேண்டுமென எப்போதும் நமக்கு மேல் இலக்கிய போலீஸ்காரர்கள் சிலர் வகுப்பெடுத்துக் கொண்டே இருப்பது ஒரு வகையான துயரம் தான். அறங் கூற்றாகும் கவிதையை  வாசித்த சமயத்தில் பழைய சம்பவமொன்று நினைவிற்கு வருகிறது. பதிமூன்று வருடங்களுக்கு முன் ஒரு இலக்கிய கூட்டத்தில் கவிதை வாசிக்கச் சென்றிருந்தேன். அன்று சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் இப்பொழுது சாகித்ய அகதெமி கூட வாங்கியிருக்கிறார் அத்தனை பிரபலம். நான் கவிதை வாசித்ததும் சற்று ஏளனமாகப் பார்த்தவர் “என்ன தோழர் இலங்கைய பத்தி நீங்க ஏன் கவிதை எழுதறீங்க? நீங்க அத விட்டு வெளில வாங்க…” என நல்வழி காட்ட முயன்றார். ஒரு நிமிடம் கூனிக் குறுகிப் போன நான் “தோழர், இது இலங்கையப் பத்தின கவிதை இல்ல, ஈழத்தப் பத்தின கவிதை… நான் அந்த நிலத்தச் சாராதவனா இருக்கலாம். ஆனா அந்த மொழியப் பேசறவந்தான ஏன் எழுதக் கூடாது?” என எதிர்க் கேள்விக் கேட்க, அவரும் சிரித்தபடி “விதாண்டவாதம் மட்டும் நல்லா பேசுங்க…” என அடுத்த கவிதையை கேட்கச் சென்றுவிட்டார். நாம் யாருக்காக துயரப்பட வேண்டும் சிந்திக்க வேண்டுமென்பதைக் கூட தொடர்ந்து வேறு யாரோ சிலர் வலியுறுத்தும் படியான சூழலென்பது ஒரு வகையில் அவமானத்திற்குரியது. தமிழனுக்கு இயல்பாகவே தன்னைத் தவிர எல்லோர் குறித்தும் கவலையுண்டு.
தமிழச்சியின் கவிதைகளில் இந்த பேதமில்லை. பாலச்சந்திரன், நிர்பயா என அவரின் தமிழ் எல்லோருக்குமானதாகத்தான் இருக்கிறது. சில உணர்ச்சிகள் எந்த மொழி பேசுகிறவனுக்கும் ஒன்றேதான். அழுகை, சந்தோசம், துயரம், வலி, இழப்பு இவற்றை எழுதாமல் கடப்பதென்பது ஒரு வகையில் தனக்குத் தானே செய்து கொள்ளும் துரோகம்.
“நூருன்னிஸாவுக்கும் ஹெலனுக்கும்
இளஞ்சூடு மிளகுப் பொங்கலை
இந்தா என்று
அழுக்குக் கையோடு போய்க் கொடுக்கும்
அழகம்மாவும் கருவாச்சியும்
ஆண்டாளே தான்.”
என்கிற கவிதை சமத்துவத்தை யாரும் சொல்லிக் கொடுக்காமல் வாழ்வாய்ப் பழகிய கரிசல் நிலத்துப் பெண்களை யதார்த்தமாக அடையாளப்படுத்துகிறது. யதார்த்தமென்பது இருப்பதை அப்படியே எழுதுதல் என்பது மட்டுமில்லை, இந்த வாழ்விற்குள்ளிருக்கும் அபூர்வ கனங்களையும் பதிவு செய்வதுதான். திருகிய மொழியில் எழுதப்படுபவையே நல்ல கவிதைகளென்கிறதொரு மாயை பொதுவிலுண்டு. எளிமையான கவிதைகள் தனித்துவமற்றவை என்கிற பிம்பத்தை தமிழில் கலாப் பிரியா தொட்டு நிறைய பேர் மாற்றியிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட கவிதையும் எளிமையாக சொல்லப்படுவதில் தான் அதன் அழகும் இருக்கிறது. கவிதைகளில் இருக்கும் தூய்மைவாதம் எத்தனை இழிவானதென்பதை நெரூதா இவ்வாறு குறிப்பிடுகிறார். “கைகளின் கடமையுணர்ச்சியால் தேய்ந்துபோய், அமிலங்களால் அரிக்கப்பட்டது போல, புகை மற்றும் வியர்வையில் தோய்ந்து போய், லில்லி மலர்கள் மற்றும் சிறுநீரின் வாசனையடித்தபடி, விதம் விதமாய் நம் வாழ்வுக்கான தொழில்களால் அழுக்குத் தெறிக்கப்பட்டு, சட்டத்திற்கு உள்ளாகவோ அல்லது அதற்கு அப்பாலோ. நாம் அணியும் உடைகள் போல் அசுத்தமான ஒரு கவிதை அல்லது நம் உடல்களைப் போல, சூப்கறை படிந்து, நம் அவமானமிக்க நடத்தையால் அசுத்தப்படுத்தப்பட்டு, நம் சுருக்கங்கள், இரவு விழிப்புகள் மற்றும் கனவுகள், அவதானிப்புகள் மற்றும் முன்கூறல்கள், வெறுப்பு மற்றும் காட்டு விலங்குகள் எதிர்பாராத சந்திப்புகளின் அதிர்ச்சிகள், அரசியல் விசுவாசங்கள் மறுப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஒப்புதல்கள் மற்றும் வரிகள்.”
மகத்தான கவிகளை நாம் இப்பொழுதும் நினைவு கொண்டிருப்பது அவர்களின் கவிதைகள் வாசிப்பவனுக்கு நெருக்கமாக இருக்கிற காரணத்தால் தான். நல்ல கவிதைகளுக்கு எந்த இறுக்கமும் தேவையில்லை. வாழ்க்கை நமக்கு தேவைக்கு அதிகமாகவே இறுக்கமாகவேதான் இருக்கிறது, ஏன் படைப்பிற்கான மொழியும் இறுக வேண்டும். வாசகனோடு அந்தரங்கமாக உரையாட விரும்பாத ஒரு படைப்பை வாசகன் விலக்கிச் சென்றுவிடுகிறான். பேச்சியை உருவகமாகக் கொண்டு தமிழச்சியால் எழுதப்பட்ட கவிதைகளணைத்தும் முக்கியமானவை. இதற்கு முந்தைய தொகுப்புகளிலும் வனப்பேச்சி உலவும் கவிதைகள் தனித்துவமான வாசிப்பனுபவத்தை தருவதாகவே இருக்கின்றன. ஒரு கவிதை என்ன சொல்கிறது என்பதை விடவும் அது என்னவாக இருக்கிறது என்பதே முக்கியம் என ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுவதை இங்கு நினைவுபடுத்துகிறேன். தமிழச்சியின் வனப்பேச்சி தொகுப்பில் வரும் ஒரு கவிதையில்
“சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைகளுக்கான ஒரு தூளிச் சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப் பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்”
என வனப்பேச்சி சொல்கிறாள். வனப்பேச்சியின் கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து இன்னொரு முறை தொகுக்கலாம். அவளுக்கு வெயில் என்று பெயர் தொகுப்பில் வரும் புழுக்கை என்னும் கவிதையில் வரும் வனப்பேச்சி நமக்கு கவுச்சியான நமது அப்பத்தாவை நினைவுபடுத்துகிறாள். அந்த மூக்குப்பொடி வாசனையையும் கவிதையில் வரும் பேச்சியின் வியர்வையையும் நமக்கு பல காலமாய்ப் பழக்கப்பட்டுப் போனவை. ”கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக்கொள்ளபடக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சிய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன.” என்கிறார் ப்ரக்ட். அவரின் மனிதனின் ஆக்கங்கள் யாவற்றிலும் என்னும் கவிதையில்
“மனிதனின் ஆக்கங்கள் யாவற்றிலிருந்தும்
பயன்பட்டுத் தேய்ந்தவைகளையே நான் தேர்கிறேன்
ஒடுங்கிப் போய்,
மழுங்கிய விளிம்புகளுடன் செப்புப் பாத்திரங்கள்,
கைகள் பலவற்றின் அழுத்தத்தில்
குடைவாகிய கைப்பிடிகள் கொண்ட கத்திகள்
முள் கரண்டிகள் :
அவ்வடிவங்கள் உன்னதமாய்த் தோன்றின எனக்கு.
அவ்வாறே கால்கள் பலவற்றால் நடக்கப்பட்டு
அரைத்துத் தள்ளப்பட்டு
வெடிப்புகளில் குத்துக் குத்தாய்ப் புற்களுடன்
புராதன வீடுகளைச் சுற்றிலும் வழிநடைச் சதுரங்கள்
இவை யாவும்
மகிழ்ச்சி நிறைந்த ஆக்கங்கள்.”
தமிழச்சி தனது கவிதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் கச்சாப் பொருட்கள் அவ்வளவும் சக மனிதர்களின் வாழ்வே. ஊரிலிருந்து முழுமையாகத் தன்னை பிய்த்தெடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் பிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அழுத்தமான பதிவுகள் இவை. அகவுலகை பிரதானப்படுத்தும் கவிதைகளையே அதிகம் கொண்டாடும் தமிழ்ச்சூழலில் புறவுலகை பிரதானமாய்க் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகள். வாழ்க்கை ஒரு தனிமனிதனோடு மட்டும் முடிந்து போவதில்லை. சமூகத்தின் அடிப்படையிலிருந்து ஒரு தனிமனிதனை ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது. மனித உரிமைகள் பற்றி சொல்ல வரும்போது ஆல்ஃபர் காம்யூ ‘சக மனிதனைத் தீர்ப்புரைக்க எந்த மனிதனுக்கும் தகுதியில்லை, அதிகாரமில்லை. மனிதனுக்கு மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒருவரே அதனைச் செய்ய முடியும். அவரோ இப்போது இல்லை’ என்கிறார்.
எல்லோருக்காகவும் சிந்திக்கும் மனம் வாய்க்கப்பெற்றவனே அடிப்படையில் கலைஞனாகிறான். கலை ஒரு தனிமனிதனை விருப்பு வெறுப்புகளிலிருந்து முதலாவதாக விடுதலை செய்ய வேண்டும். தனித்ததொரு எல்லையோடு முடிந்து போகாமல் தான் பார்க்கின்ற கேட்கின்ற எல்லாவற்றிற்குமான எதிர்வினைகளாகத்தான் இத்தொகுப்பின் கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு தனிப்பட்ட வகைமைக்குள் அடங்கிவிடாமல் பரந்ததொரு உலகை நாம் உணர்ந்து கொள்ளமுடிகிறது. வாசகர்களால் தான் சரியாகப் புரிந்து கொள்ளப்பட  வேண்டுமென்பதைத்தான் எல்லா எழுத்தாளனும் விரும்புகிறான். இதன் இன்னொரு எல்லையில் வாசகன் ஒரு எழுத்தாளனிடத்தில் தன் வாழ்வின் தீர்க்கப்பட முடியாத புதிர்களுக்கான பதில்களை ஏதோவொரு வகையில் அவனது எழுத்து தரக்கூடுமென நம்புகிறான். தன்னோடு இணங்க முடியாத படைப்பின் மீது ஒரு வாசகன் வெறுப்பு கொள்வது இதனால் தான். மாறாக ஒரு படைப்பாளனை வெறும் பொழுதுபோக்கின் நீட்சியாக மட்டுமே பார்க்க கூடிய வாசகர்களும் உண்டு. இவர்களுக்கு கார்ட்டூன் சேனல்களில் வரும் தோராவும் ஒரு நல்ல கவிதையும் ஒன்றே  தான். பயன்பாடு பொழுது போக்கல் மட்டுமே. அவ்விடத்தில் ஒரு கவிஞன் தனது கவிதை குறித்த எந்த விளக்கங்களையும் இதுமாதிரியான வாசகர்களுக்குத் தரத் தேவையில்லை. வாசிப்பவனை ஒரு தனிநபர் என்று சொல்வதை விடப் பிரதியின் ஒருமைப் புள்ளி, பிரதி புரியப்படும் இடம் அல்லது பிரதி சென்றடையும் இடம் என்று வரையறை செய்கிறார் ரோலான் பார்த். தமிழச்சியின் கவிதைகள் வாசகனோடு நேரடியாக உரையாடும் தன்மை கொண்டவை.
மனதளவே ஆகும் மழை என்னும் பகுதியை வாசிக்கும் முன் இங்கும் மழைக் கவிதைகளா என சின்னதொரு அச்சத்துடன் தான் பக்கங்களைப் புரட்டினேன். ஏனெனில் தமிழ்க் கவிஞர்கள் மழையே தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு மழைக் கவிதைகள் எழுதி கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரே கவிதையை ஆயிரம் பேர் எழுதின சலிப்பு அது. ஆனால் ஆறுதலாய்
”ஒரு விலகலை
ஒரு பிரிவை
ஒரு துக்கத்தை
சொட்டு முத்தத்தில் மறக்கடித்து விடுகிறது மழை…”

“எல்லோருக்கும் பொதுவான மழைதான்
அவரவர் மெய்யளவு நனைகிறார்கள்
மனதளவே ஆகுமாம் மழை…”
என்னும் இரண்டு கவிதைகள் நாம் பார்த்த அதே மழைதான் ஆனால் இந்த சொற்கள் புதிய அனுபத்தைத் தருகின்றன. நூற்றாண்டு காலமாய் பாடுபொருளாய் இருக்கும் விஷயங்களை எழுதுகையில் அதீத கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. எந்த கனத்திலும் வாசகன் இது சலித்துப்போன தொன்று மிக எளிதாக  புறக்கணிக்கக் கூடும். புதிய அனுபவங்களைத் தராத படைப்பை ஒரு வாசகன் புறக்கணிக்கவே செய்கிறான். தொகுப்பின் கடைசிப் பகுதியான அப்பா முதல் அப்பா வரை கவிதைகளை கூடுதல் பொறாமையுடன் தான் வாசித்தேன். அப்பா என்கிற வார்த்தை எனக்கு துரோகமும் துர்கனவுமாய் மட்டுமே இருப்பதால் உலகம் முழுக்க இருக்கும் எல்லா அப்பாக்களையும் வெறுக்கும் மனங்கொண்டவனாகவே இருக்கிறேன். அப்பாக்களின் கதைகளை முற்றிலும் வெறுக்கிறவன் நான். ஆனாலும் இந்த கவிதைகள் என்னை வெறுத்து ஒதுக்க செய்யவில்லை.
”பரமபத விளையாட்டில்
பிள்ளையைப் பாம்பு கொத்த
தோள் சேர்க்கும்
விஷமுறிவில்
அப்பாக்களின் முதல் கண்டம்.”
என்னும் வரிகள் ஏதோவொரு வகையில் எனக்கான ஆறுதலாகவும் இருக்கிறது. இரண்டாவது முறை புத்தகத்தை பின்னாலிருந்து தான் வாசித்தேன். நான் அறிந்திருக்காத வேறு வகை அப்பாக்களும் இருக்கவே செய்கிறார்களென்பது உறவுகளின் மீதான நம்பிக்கையைத் தருகிறது.
‘தீர்க்கதரிசிகளில் முதல்வர், கவிஞர்களின் அரசர், ஒரு நிஜமான கடவுள்’ என ஃப்ரஞ்ச் கவிஞர் பாதலரைக் குறித்து ரைம்போ குறிப்பிடுகிறார். ஏனெனில் கவிதை தான் ஒருவனுக்குள் மகத்தான விளைவுகளையும் மாற்றங்களையும் உருவாக்குகின்றன. தரமான கவிதைகளும் கவிஞர்களும் அப்படிக் கொண்டாடத் தகுதியானவர்களே. கரிசல் நிலத்தின் வெக்கை மிக்க கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவரும் தமிழச்சியின் இந்தக் கவிதைகளை வாசித்து முடித்தபின் இப்பத்தான் சொல்லத் தோன்றுகிறது, “வெயிலுக்கு சுமதி என்று பெயர்.”


Comments

  1. உண்மை வரிகள். // தமிழச்சி தனது கவிதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் கச்சாப் பொருட்கள் அவ்வளவும் சக மனிதர்களின் வாழ்வே. ஊரிலிருந்து முழுமையாகத் தன்னை பிய்த்தெடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் பிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அழுத்தமான பதிவுகள் இவை. அகவுலகை பிரதானப்படுத்தும் கவிதைகளையே அதிகம் கொண்டாடும் தமிழ்ச்சூழலில் புறவுலகை பிரதானமாய்க் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகள்.//

    ReplyDelete
  2. மிக நேர்த்தியான, ரசனையான விமர்சனம்...விமர்சனம் அல்ல...தமிழச்சியின் எழுத்துக்களை படிக்க வேண்டும் என்று தூண்டும் ரசனை...நன்றி தோழரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.

நொண்டிக் கருப்பு

உமா சித்தியும் சாம்பல் நிற ஸர்ப்பக் குட்டிகளும்....